Published : 02 Aug 2020 02:43 PM
Last Updated : 02 Aug 2020 02:43 PM
கரோனா தொற்றால் கோவிலுக்கு போலீஸ் நிலையம் இடம் மாறியுள்ளது. தற்போது புகார் தர போலீஸாரை நாடி கோவிலுக்கு பொதுமக்கள் செல்கின்றனர்.
புதுச்சேரி கிராமப்பகுதியான காட்டேரிக்குப்பம் காவல் நிலையத்தில் பணியாற்றிய காவலர் மற்றும் ஊர்க்காவல் படை வீரருக்கு கரோனா நோய் தொற்று ஏற்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து காவல் நிலையம் மூடப்பட்டது. காவல் நிலையத்தில் பணியாற்றிய காவல் அதிகாரிகள் முதல் ஊர்க்காவல் படை வீரர்கள் வரை அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
இதனால் அந்த பகுதியில் ஏதேனும் பிரச்சனை என்றால் பொதுமக்கள் 10 கிலோ மீட்டர் தொலைவு தள்ளியுள்ள திருக்கனூர் காவல் நிலையத்துக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால் கிராம மக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர். இதுதொடர்பாக கிராம மக்கள் போலீஸ் உயர் அதிகாரிகளிடம் முறையிட்டனர்.
இதனையடுத்து திருக்கனூர் காவல் நிலையத்தில் இருந்து தலைமை காவலர் மற்றும் காவலர் காட்டேரிக்குப்பம் காவல்நிலையத்துக்கு பணியமர்த்தப்பட்டுள்ளனர். காட்டேரிகுப்பம் போலீஸ் நிலையம் மூடப்பட்டு உள்ளதால் தற்காலிகமாக போலீஸ் நிலையம் அங்குள்ள பெருமாள் கோவிலில் அமைக்கப்பட்டுள்ளது.
இங்கு இவர்கள் பணி செய்து வருகின்றனர். இப்பகுதி பொதுமக்கள் தங்கள் புகார்களை, மனுக்களை தெரிவிக்க தற்போது தற்காலிக போலீஸ் நிலையம் அமைந்துள்ள கோயிலுக்கு செல்லத்தொடங்கியுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT