Published : 02 Aug 2020 12:34 PM
Last Updated : 02 Aug 2020 12:34 PM

காரைக்காலில் ஆடிப்பெருக்கு கொண்டாட்டம்- ஆற்றங்கரைகளில் வழக்கத்தைவிட மக்கள் கூட்டம் குறைவு

காரைக்கால் மாவட்டத்தில் ஆற்றங்கரைகளில் குறைவான மக்கள் கூட்டத்துடன் ஆடிப்பெருக்கு கொண்டாட்டம் நடைபெற்றது

கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக சில தளர்வுகளுடன் ஊரடங்கு அமலில் உள்ளது. தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் தளர்வற்ற முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் புதுச்சேரி மாநிலத்தில் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு முறை இல்லை.

இந்நிலையில் காரைக்கால் மாவட்டத்தில் இன்று(ஆக.2) ஆடிப்பெருக்கு பண்டிகையை மக்கள் கொண்டாடினர். மேட்டூர் அணை உரிய நேரத்தில் திறக்கப்பட்ட நிலையில் கடைமடைப் பகுதியான காரைக்கால் மாவட்டத்தில் உள்ள ஆறுகளில் தண்ணீர் நிறைந்து காணப்படுகிறது. இதனால் மக்கள் தாங்கள் வசிக்கும் பகுதிக்கு அருகாமையில் உள்ள ஆறுகளில் ஆடிப்பெருக்கு பண்டிகையை கொண்டாடினர்.

காரைக்கால் மதகடிப் பகுதியில் அரசலாற்றங்காரையில் புதிதாக திருமணமான பெண்கள், சிறுவர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் முகக் கவசம் அணிந்து கருகமணி, வளையல், காப்பரிசி, கண்ணாடி, பேரிக்காய், பழவகைகள் உள்ளிட்டவற்றை வைத்து படையல் செய்து வழிபட்டனர். தொடர்ந்து பெண்கள் கழுத்திலும், ஆண்கள் கைகளிலும் மஞ்சள் கயிற்றை கட்டிக் கொண்டனர். போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகள், நோய்த் தொற்று அச்சம் காரணமாக வழக்கமான அளவில் மக்கள் கூட்டம் காணப்படவில்லை. மிகக் குறைந்த எண்ணிக்கையிலான மக்களே ஆற்றங்கரைகளுக்கு வந்து ஆடிப்பெருக்கை கொண்டாடினர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x