Published : 02 Aug 2020 08:06 AM
Last Updated : 02 Aug 2020 08:06 AM

மனிதர்களிடமிருந்து விலங்குகளுக்கும் கரோனா தொற்று பரவும் அபாயம்: வனத்துக்குள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை

மனிதர்களிடமிருந்து கரோனா வைரஸ் தொற்று வன விலங்குகளுக்கும் பரவ வாய்ப்புள்ளதால் வனத்துக்குள் செல்லக் கூடாது என பொதுமக்களை வனத் துறையினர் எச்சரித்துள்ளனர்.

நீலகிரி மாவட்டத்தில் கரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவி வருகிறது. வனப்பகுதியை ஒட்டி இருக்கும் மக்கள், விறகு மற்றும் தைல மர இலைகளை சேகரிக்க வனத்துக்குள் செல்ல வாய்ப்புள்ளது. இதன்மூலம் மனிதர்களிடமிருந்து வன விலங்குகளுக்கு தொற்று பரவும் அபாயம் உள்ளதாக வனத்துறை எச்சரித்துள்ளது.

வனத்துக்குள் பொதுமக்கள் செல்லாமல் இருக்க தீவிர ரோந்துப் பணியில் வனத் துறையினர் ஈடுபட்டுள்ளனர். அவலாஞ்சி வனசரகர் சிவா தலைமையில் 10-க்கும் மேற்பட்ட வனத் துறையினர் அவலாஞ்சி, எமரால்டு, அத்திக்கல் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த மக்களிடம் வனப்பகுதிகளுக்கு நுழையக் கூடாது என அறிவுறுத்தினர்.

தொற்று உள்ளவர்கள் வனத்துக்குள் சென்றால், அவர்கள் மூலம் விலங்குகளுக்கு பரவி வனத்துக்கு பேரழிவு ஏற்படும் அபாயம் உள்ளதாகவும், மீறி வனத்துக்குள் சென்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் வனத் துறையினர் எச்சரித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x