கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்கீழ் மாணவர் சேர்க்கை விவரத்தை வெளியிடக் கோரி வழக்கு

கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்கீழ் மாணவர் சேர்க்கை விவரத்தை வெளியிடக் கோரி வழக்கு
Updated on
1 min read

கட்டாயக் கல்வி உரிமைச்சட்டத்தின்கீழ் பள்ளிகளில் ஒதுக்கப்பட்டுள்ள 25 சதவீத மாணவர் சேர்க்கைக்கான நடைமுறைகள் மற்றும் கால அட்டவணையை வெளியிடக் கோரி ‘பாப்புலர் பிரன்ட் ஆஃப் இந்தியா’ அமைப்பு சார்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக ‘பாப்புலர் பிரன்ட் ஆஃப் இந்தியா’ அமைப்பின் மாநில செயலாளர் ஜெ.முகம்மது ரசின் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், “கட்டாய கல்விஉரிமை சட்டத்தின் அடிப்படையில் சிறுபான்மை அல்லாத பள்ளிகளில் ஒவ்வொரு ஆண்டும் 25 சதவீத இடங்கள் கட்டாய கல்வி சட்டத்தின்கீழ் ஒதுக்கப்படுகிறது.

வழக்கமாக அதற்கான மாணவர் சேர்க்கை ஏப்ரல் 2-ம் தேதி தொடங்கி மே 29-ம்தேதியுடன் முடிவடையும். தற்போது கரோனா ஊரடங்கால் பள்ளிகள் மூடப்பட்டுள்ள நிலையில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான கால அட்டவணை குறித்து ஏதும் தகவல் இல்லை.

மேலும், இச்சட்டத்தின்கீழ் கோரப்படும் இடங்களுக்கான நடைமுறைகள் என்ன,எவ்வாறு நிரப்பப்படவுள்ளது என்பது குறித்தும் தெளிவுபடுத்தப்படவில்லை. இதனால், பள்ளிகளில் சேர்க்கைக்காக விண்ணப்பித்து காத்திருக்கும் பெற்றோர் குழப்பமடைந்துள்ளனர்.

தனியார் பள்ளி நிர்வாகங்கள் ஆன்லைன் மூலமாக வகுப்புகளை தொடங்கியுள்ளன. கல்விக் கட்டணத்தில் 40 சதவீதத்தை வசூலிக்க உயர் நீதிமன்றமும் அனுமதியளித்துள்ளது.

எனவே கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்கீழ் பள்ளிகளில் ஒதுக்கப்பட்டுள்ள 25 சதவீத மாணவர் சேர்க்கைக்கான கால அட்டவணை மற்றும் நடைமுறைகளை வெளியிட தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும். அவற்றை விளம்பரப்படுத்த அறிவுறுத்த வேண்டும். அதுவரை எல்கேஜி, யுகேஜி, 1-ம் வகுப்புகளில் 25 சதவீத இடங்களை காலியாக வைத்திருக்க உத்தரவிட வேண்டும் என கோரியுள்ளார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in