Published : 02 Aug 2020 07:42 AM
Last Updated : 02 Aug 2020 07:42 AM

வியாபாரிகள் முகக் கவசம் அணிவது இல்லை: உணவு பாதுகாப்பு துறையிடம் மக்கள் புகார்

முகக் கவசம் பயன்படுத்தாத வியாபாரிகள் குறித்து உணவு பாதுகாப்பு துறையிடம் பொதுமக்கள் அதிக அளவில் புகார் அளித்து வருகின்றனர்.

ஓட்டல்களில் சுகாதாரமற்ற உணவுகள் விற்பனை, மளிகை கடைகளில் காலாவதி பொருட்கள் விற்பனை, தடை செய்யப்பட்ட பான்பராக் உள்ளிட்ட போதை பொருட்கள் விற்பனை ஆகியவை தொடர்பான புகார்களை பொதுமக்கள் தெரிவிக்க 9444042322 என்ற வாட்ஸ்அப் எண் சிலஆண்டுகளுக்கு முன்பு அறிமுகம் செய்யப்பட்டது. இந்த எண்ணில் பொதுமக்கள் பல புகார்களை தெரிவித்து வருகின்றனர். இதன் அடிப்படையில், உணவு பாதுகாப்பு துறை அலுவலர்களும் கள ஆய்வு செய்து சட்டப்படி நடவடிக்கை எடுக்கின்றனர்.

இந்நிலையில், தமிழகம் முழுவதும் கரோனா பரவலை கட்டுப்படுத்த ஊடரங்கு உத்தரவு அமலில் உள்ளது. கரோனா பரவலை தடுக்க அனைவரும் கட்டாயம் முகக் கவசம் அணிய வேண்டும் என்று அரசு தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. முகக் கவசங்களை அணியும்படி வியாபாரிகளுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

ஆனால், ஒருசில வியாபாரிகள் பொருட்களை விற்பனை செய்யும்போது முகக் கவசத்தை அணிவது இல்லை என்று கூறப்படுகிறது. இதுதொடர்பாக கடந்த சில மாதங்களாக உணவு பாதுகாப்பு துறைக்கு அதிக அளவில் புகார்கள் வருகின்றன.

இதுகுறித்து உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் கூறியபோது, ‘‘வியாபாரிகள் முகக் கவசம் அணிவது இல்லை, கடைக்கு வெளியே கைகழுவும் திரவங்களை வைப்பது இல்லை என்று தினமும் 5 புகார்கள் வரை வருகின்றன. மாதம்தோறும் பதிவாகும் மொத்த புகார்களில் 15 சதவீதம் இதுபோன்ற புகார்கள்வருகின்றன. இதன் அடிப்படையில் உணவு பாதுகாப்பு துறை அலுவலர்கள் சம்பந்தப்பட்ட கடைகளில் ஆய்வு செய்து வியாபாரிகளுக்கு அறிவுறுத்துகின்றனர். விதிமுறைகளை பின்பற்றுகின்றனரா என்று, குறிப்பிட்ட காலத்துக்கு ஒருமுறை கண்காணிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது’’ என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x