Published : 02 Aug 2020 07:33 AM
Last Updated : 02 Aug 2020 07:33 AM

ரூ.12.20 லட்சம் வசூலித்ததாக தனியார் மருத்துவமனை மீது புகார்; கரோனா சிகிச்சை அளிக்க அரசு அனுமதி ரத்து: சுகாதாரத் துறை அமைச்சர் அறிவிப்பு

சென்னை

கரோனா தொற்றுக்கு சிகிச்சை அளிக்க ரூ.12.20 லட்சம் கட்டணம்வசூலித்த சென்னை கீழ்ப்பாக்கம் ‘பி வெல்' தனியார் மருத்துவமனைக்கு கரோனா சிகிச்சைக்கான அனுமதி தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது என்று சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தனியார் மருத்துவமனைகள்அரசுடன் இணைந்து கரோனாநோய்க்கான சிகிச்சைகளை மக்களுக்கு வழங்க அரசு அனுமதிஅளித்து வருகிறது. இந்நிலையில், பொதுமக்கள் கரோனா நோய்சிகிச்சை காரணமாக அதிக நிதிச்சுமைக்கு ஆளாகாதவண்ணம், அதிகபட்ச கட்டணங்களை நிர்ணயித்து கடந்த ஜூன் மாதம் 5-ம் தேதி அரசாணை வெளியிட்டது.

கரோனா நோய்க்கு வழங்கப்படும் சிகிச்சைகள், அதற்காக தனியார் மருத்துவமனைகளில் வசூலிக்கப்படும் கட்டணங்கள் குறித்து சுகாதாரத் துறையால் கண்காணிப்பு மற்றும் திடீர் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சென்னை, கீழ்ப்பாக்கத்தில் உள்ள பி வெல் (Be Well) மருத்துவமனையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டதில் நோயாளி ஒருவருக்கு 19 நாட்களுக்கான சிகிச்சைக்கு ரூ.12 லட்சத்து 20 ஆயிரம் வசூலிக்கப்பட்ட விவரம் உறுதிசெய்யப்பட்டது. சிகிச்சைக்கு அரசு வழங்கிய நெறிமுறைகளின்படி கூடுதல் சிறப்பு மருந்துகள் ஏதும் பயன்படுத்தப்படவில்லை.

கூடுதல் கட்டணம் வசூல் செய்தது உறுதி செய்யப்பட்ட நிலையில் அந்த மருத்துவமனைக்கு கரோனா நோய் சிகிச்சைக்காக அளிக்கப்பட்ட அரசு அனுமதி தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. கரோனா சிகிச்சை வழங்கும் அனைத்து தனியார் மருத்துவமனைகளிலும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கட்டண விவரம் தெளிவாக பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட வேண்டும் என ஏற்கெனவே உரிய அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. தனியார் மருத்துவமனைகள் அரசு நிர்ணயித்துள்ள கட்டணத்தைவிட கூடுதலாக வசூலிப்பதாக புகார் பெறப்பட்டால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x