

கூடுதல் அட்வகேட் ஜெனரலாக இருந்த போது கிரானைட் வழக்கில் ஆஜரானதால் பி.ஆர்.பழனிச்சாமி விடுதலையை ரத்து செய்யக்கோரிய வழக்கு விசாரணையை வேறு நீதிபதிக்கு மாற்றுமாறு வழக்கறிஞர்கள் விடுத்த கோரிக்கையை ஏற்க நீதிபதி பி.புகழேந்தி மறுத்துவிட்டார்.
மேலூர் அருகே சட்டவிரோதமாக கிரானைட் கற்கள் வெட்டி எடுக்கப்பட்டு, தனியார் பட்டா நிலங்களில் வைக்கப்பட்டுள்ள கிரானைட் கற்களை அரசுடமையாக்கக் கோரி மதுரை மாவட்ட ஆட்சியர்கள் மேலூர் நீதித்துறை நடுவர் மன்றத்தில் இதுவரை 98 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இதில் பி.ஆர்.பழனிச்சாமி, அவரது மகன் சுரேஷ்குமார் ஆகியோர் மீதான இரு வழக்குகளும், குவாரி அதிபர் ராம.சகாதேவன் ஆகியோர் மீதான ஒரு வழக்கும் மேலூர் நீதித்துறை நடுவர் மகேந்திரபூபதி முன்பு 29.3.2016-ல் விசாரணைக்கு வந்தது.
விசாரணைக்குப்பின் பி.ஆர்.பழனிச்சாமி, சுரேஷ்குமார், ராம.சகாதேவன் ஆகியோரை விடுதலை செய்து நீதித்துறை நடுவர் உத்தரவிட்டார்.
மேலும் நடுவர் தனது உத்தரவில், இந்த வழக்குகளை 2013-ல் தாக்கல் செய்த ஐஏஎஸ் அதிகாரி அன்சுல்மிஸ்ரா, அப்போது மாவட்ட ஆட்சியராக இல்லை என்றும், இருப்பினும் தான் ஆட்சியராக இருப்பதாக சொல்லி வழக்குகளை தாக்கல் செய்திருப்பதாகவும், மதுரை மாவட்ட ஆட்சியராக இருப்பதாக கூறி விசாரணையின் போது நேரில் ஆஜராக விலக்கு கோரியதாகவும்.
இதனால் அன்சுல்மிஸ்ரா மீதும், அவருக்கு சாதகமாக செயல்பட்ட அரசு வழக்கறிஞர்கள் மீதும் குற்றவியல் நடவடிக்கை எடுக்கவும் பரிந்துரை செய்தார்.
நீதித்துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த உத்தரவு தொடர்பாக மேலூர் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்துக்கு மாவட்ட நீதிபதிகள் நேரில் சென்று விசாரணை நடத்தினர். பின்னர் மகேந்திரபூபதி சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
இந்நிலையில் பி.ஆர்.பழனிச்சாமி உள்ளிட்ட 3 பேரை விடுதலை செய்தும், ஐஏஎஸ் அதிகாரி, அரசு வழக்கறிஞர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் மேலூர் நீதித்துறை நடுவர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக்கோரி மாவட்ட ஆட்சியர் சார்பில் உயர் நீதிமன்ற கிளையில் இரு மேல்முறையீடு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இதேபோல் பிஆர்பி உள்ளிட்டவர்கள் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து அரசு சார்பில் மேல்முறையீடு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்களை தற்போது நீதிபதி பி.புகழேந்தி விசாரித்து வருகிறார்.
இந்த வழக்குகள் ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது, பி.ஆர். பழனிச்சாமி தரப்பில் நீதிபதி புகழேந்தி நீதிபதியாவதற்கு முன்பு சிறப்பு அரசு வழக்கறிஞர் மற்றும் கூடுதல் அட்வகேட் ஜெனரலாக பணிபுரிந்த போது கிரானைட் வழக்குகளில் அரசு சார்பில் ஆஜராகியிருப்பதால் இந்த வழக்குகளின் விசாரணையை வேறு நீதிபதிக்கு மாற்ற வேண்டும் என கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
இதை ஏற்க மறுத்த நீதிபதி, தற்போது இதுபோன்ற வழக்குகளை விசாரிக்கும் பொறுப்பு எனக்கு தரப்பட்டுள்ளது. இதனால் இந்த வழக்கு என் முன்பு விசாரணைக்கு பட்டியலிடப்படுகிறது.
அரசு சிறப்பு வழக்கறிஞராகவும், கூடுதல் அட்வகேட் ஜெனரலாகவும் இருந்த போது அரசு சார்பில் ஆஜரானதால் இந்த வழக்கை விசாரிப்பதில் இருந்து விலகிக்கொள்ளுமாறு எதிர்மனுதாரர்களின் வழக்கறிஞர்கள் கேட்பதை ஏற்க முடியாது.
இந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்டால் வழக்குளை விசாரிக்கும் நீதிபதிகளை வழக்கறிஞர்கள் முடிவு செய்யும் நிலை ஏற்படும். விசாரணை ஆக. 6-க்கு தள்ளிவைக்கப்படுகிறது. இது தொடர்பாக வழக்கின் எதிர்மனுதாரர்களுக்கு அரசு வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்ப வேண்டும் என உத்தரவிட்டார்.