’ஜெயராஜ், பென்னிக்ஸ் மீதான புகார் மனுவில் எஸ்.ஐ கட்டாயப்படுத்தியதால் கையெழுத்திட்டேன்’: ஜாமீன் மனுவில் காவலர் முருகன் பரபரப்பு தகவல்

எஸ்.ஐ.பாலகிருஷ்ணன் (இடது); காவலர் முருகன் (வலது)
எஸ்.ஐ.பாலகிருஷ்ணன் (இடது); காவலர் முருகன் (வலது)
Updated on
1 min read

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் ஜாமீன் மனு மாவட்ட நீதிமன்றத்தில் தள்ளுபடியான நிலையில் காவலர் முருகன் உயர் நீதிமன்ற கிளையில் ஜாமீன் மனு தாக்கல் செய்துள்ளார்.

அதில் ஜெயராஜ், பென்னிக்ஸ் மீதான புகார் மனுவில் சார்பு ஆய்வாளர் பாலகிருஷ்ணன் கட்டாயப்படுத்தியதால் கையெழுத்திட்டேன் என முருகன் கூறியுள்ளார்.

சாத்தான்குளம் காவல் நிலையத்தில் ஜெயராஜ், அவர் மகன் பென்னிக்ஸ் கொலை வழக்கில் சாத்தான்குளம் காவல் நிலைய தலைமை காவலர் முருகன் கைது செய்யப்பட்டு மதுரை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவர் ஜாமீன் கேட்டு தாக்கல் செய்த மனுவை மதுரை மாவட்ட நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இதையடுத்து முருகன் உயர் நீதிமன்றக் கிளையில் ஜாமீன் மனு தாக்கல் செய்துள்ளார். அதில், ஜூலை 1 முதல் சிறையில் உள்ளேன். சம்பவத்தின் போது இரவில் வேறு ஒரு வழக்கு விசாரணை தொடர்பாக அரசு மருத்துவமனைக்கு சென்று விட்டு சுமார் 8.15 மணியளவிலேயே காவல் நிலையம் திரும்பினேன். அ

ப்போது ஜெயராஜ், பென்னிக்ஸ் தொடர்பான தட்டச்சு செய்யப்பட்ட புகார் மனுவில் கையெழுத்திடுமாறு உதவி காவல் ஆய்வாளர் பாலகிருஷ்ணன் கட்டாயப்படுத்தினார்.

அவர் கட்டாயப்படுத்தியதாலும், உயர் அதிகாரி என்பதாலும் நான் கையெழுத்திட்டேன். இதைத் தவிர வேறு எந்த செயலிலும் நான் ஈடுபடவில்லை. விசாரணை முடிவடையும் நிலையில் உள்ளது.

எனவே ஜாமின் வழங்க வேண்டும். ஜாமீன் வழங்கினால் தலைமறைவாகமாட்டேன். நிபந்தனைகளுக்கு கட்டுப்படுவேன் எனக் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.

காவலர் முருகனின் இந்த வாக்குமூலம் முக்கியத்துவம் பெறுகிறது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in