Last Updated : 01 Aug, 2020 05:49 PM

 

Published : 01 Aug 2020 05:49 PM
Last Updated : 01 Aug 2020 05:49 PM

சாத்தான்குளம் தந்தை, மகன் மரணம் வழக்கு: பென்னிக்ஸின் நண்பர்கள் 7 பேரிடம் சிபிஐ விசாரணை

தூத்துக்குடி

சாத்தான்குளத்தில் போலீஸார் தாக்கியதில் தந்தை, மகன் உயிரிழந்த வழக்கு தொடர்பாக பென்னிக்ஸின் நண்பர்கள் 7 பேரிடம் சிபிஐ அதிகாரிகள் இன்று விசாரணை நடத்தினர்.

சாத்தான்குளத்தைச் சேர்ந்த வியாபாரிகளான ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகிய இருவரும் போலீஸார் தாக்கியதில் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக மதுரை உயர்நீதிமன்றக் கிளை தாமாக முன்வந்து விசாரணை நடத்தி வருகிறது.

மேலும், உயர் நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் இந்த சம்பவம் தொடர்பாக சிபிஐ வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.

இந்த வழக்கு தொடர்பாக சாத்தான்குளம் காவல் நிலையத்தில் பணியாற்றிய ஆய்வாளர் ஸ்ரீதர் உட்பட 10 போலீஸார் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்த வழக்கை விசாரித்து வரும் சிபிஐ அதிகாரிகள் சிலருக்கு கரோனா தொற்று ஏற்பட்டதால் வழக்கு விசாரணையில் சில நாட்கள் தொய்வு ஏற்பட்டது.

இந்நிலையில் இந்த வழக்கு கடந்த 28-ம் தேதி மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் விசாரணைக்கு வந்த போது, இந்த வழக்கு தொடர்பான விசாரணை நிலை அறிக்கையை தாக்கல் செய்ய சிபிஐ-க்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இந்நிலையில் சிபிஐ அதிகாரிகள் இந்த வழக்கு விசாரணையை மீண்டும் தீவிரப்படுத்தியுள்ளனர். மதுரையில் இருந்து 4 சிபிஐ அதிகாரிகள் இன்று மதியம் 12.30 மணியளவில் சாத்தான்குளம் வந்தனர்.

சாத்தான்குளம் கீழ ரதவீதியில் உள்ள வழக்கறிஞர் மணிமாறன் அலுவலகத்தில் வைத்து பென்னிக்ஸின் நண்பர்களிடம் அவர்கள் விசாரணை நடத்தினர்.

பென்னிக்ஸின் நண்பர்களான வழக்கறிஞர்கள் மணிமாறன், ராஜாராம், ரவிச்சந்திரன் மற்றும் நண்பர்கள் சங்கரலிங்கம், ரவிசங்கர், சுடலைமுத்து, நாகராஜன் ஆகிய 7 பேரிடமும் தனித்தனியாக விசாரணை நடத்தினர்.

மாலை 4.30 மணி வரை சுமார் 4 மணி நேரம் இந்த விசாரணை தொடர்ந்தது. பின்னர் சிபிஐ அதிகாரிகள் மதுரைக்கு புறப்பட்டுச் சென்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x