Published : 01 Aug 2020 10:40 AM
Last Updated : 01 Aug 2020 10:40 AM

காவலர் தேர்வில் தேர்ச்சி பெற்று நியமனம் பெறாதவர்களுக்கு பணி நியமனம் வழங்குக; சரத்குமார்

காவலர் தேர்வில் தேர்ச்சி பெற்று நியமனம் பெறாதவர்களுக்கு பணி நியமனம் வழங்க வேண்டும் என்று, அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக, சரத்குமார் இன்று (ஆக.1) வெளியிட்ட அறிக்கை:

"கடந்த 2019-ம் ஆண்டு நடைபெற்ற இரண்டாம் நிலை காவலர் தேர்வில் மொத்த மதிப்பெண்கள் அடிப்படையில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் தேர்ச்சி பெற்று அவர்களில் 8,888 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட்டதில், மீதமுள்ள 11 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் வெளியேற்றப்பட்டிருந்தனர். 2020-2021 ஆம் ஆண்டு தமிழ்நாடு பட்ஜெட் கூட்டத்தொடரில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காவலர் காலிப்பணிடங்களை நிரப்ப உள்ளதாக துணை முதல்வர் அறிவித்திருந்தார்.

தற்போது கரோனாவினால் இக்கட்டான சூழலை தமிழகம் சந்தித்து வரும் நிலையில், கூடுதல் காவலர்களை நியமிப்பது உதவியாக இருக்கும். இந்த வருடம் காவலராக தேர்வு செய்யப்பட்டால் பயிற்சி பெறும் 6 மாத காலம் ஊதியம் வழங்க வேண்டாம் என தேர்ச்சி பெற்ற காவலர்கள் தெரிவிப்பதிலிருந்து அவர்களின் வாழ்க்கைப் போராட்டத்தைப் புரிந்து கொள்ள முடிகிறது.

இரண்டாம் நிலை காவலர் தேர்வில் மொத்த மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்ச்சி பெற்று, நிரப்பப்படாத பணியிடம் இல்லாததால் பணியில் சேர முடியாமல் உள்ளவர்களில் உச்ச வயது வரம்பை எட்டியவர்கள் அதிகம் இருப்பதால் அவர்களின் எதிர்கால கனவு, வாழ்வாதார நலனை கருத்தில் கொண்டு அனைவரையும் நிரப்பப்படாமல் உள்ள காவலர் பணியிடத்தில் பணி நியமனம் செய்தால் சிறப்பாக இருக்கும் என கருதுகிறேன்.

மக்கள் பாதுகாப்புக்காக உழைக்க வேண்டும் என்ற நோக்கில் ஆண்டுதோறும் தேர்வு எழுதி தோற்காமல் பின்தங்கி இருக்கும் இளைஞர்களின் சூழ்நிலையை கருத்தில் கொண்டு தமிழக முதல்வர், தேர்ச்சி பெற்ற 10 ஆயிரத்திற்கும் பணிநியமனம் வழங்க ஆவன செய்ய வேண்டும் என அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் சார்பில் வேண்டுகோள் விடுக்கிறேன்"

இவ்வாறு சரத்குமார் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x