

யோகா செய்தாலே போதுமானது; கரோனாவை விரட்டிவிடலாம் என்று தொற்றிலிருந்து மீண்ட கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தெரிவித்துள்ளார்.
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா வடபழஞ்சியில் கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க பிரமாண்ட சிகிச்சை மையம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த மையத்தை இன்று அமைச்சர்கள் செல்லூர் கே.ராஜூ, ஆர்.பி. உதயகுமார் ஆகியோர் பார்வையிட்டனர்.
அதன்பின் வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறுகையில், ‘‘கரோனா சிகிச்சைக்குப் பின் முழு குணம் அடைந்து வீட்டிற்கு செல்வோரின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.
மதுரை மாவட்டத்தில் தொற்று பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவோர்க்கு 5 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தற்போது மதுரை மாவட்டம் வடபழஞ்சியில் மூன்று அடுக்குகளில் கொண்டுள்ள இந்த அடுக்கு மாடியில் 800 நோயாளிகள் சிகிச்சை பெற்றுக் கொள்வதற்கான பிரம்மாண்ட மையம் அமைக்கப்பட்டுள்ளது.
நோயாளிகளுக்குத் தேவையான படுக்கை வசதிகள் அனைத்தும் தயார் நிலையில் உள்ளது. இதை பார்வையிடுவதற்கு முதல்வர் மதுரை வர உள்ளார், ’’ என்றார்.
அமைச்சர் செல்லூர் கே.ராஜூ பேசுகையில், ‘‘கரோனாவுக்கு மருந்து கிடையாது. தனித்து இருக்க வேண்டும். விழித்து இருக்க வேண்டும் என்பதே இதற்கு மருந்து. தொற்று வந்தாலும் பயப்படக்கூடாது. அச்சமே இந்த நோய்க்கு முதல் எதிரி. யோகா செய்தாலே போதுமானது இந்த நோயை விரட்டிவிடலாம், ’’ என்றார்.