கரோனா தடுப்பு களப்பணியாளர்களுக்கு குப்பை வண்டியில் உணவு சப்ளை: சென்னை மாநகராட்சி ஆணையருக்கு மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்

கரோனா தடுப்பு களப்பணியாளர்களுக்கு குப்பை வண்டியில் உணவு சப்ளை: சென்னை மாநகராட்சி ஆணையருக்கு மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்
Updated on
1 min read

கரோனா தடுப்பு களப்பணியில் ஈடுபட்டும் களப்பணியாளர்கள் மற்றும் தன்னார்வலர்களுக்குக் குப்பை வண்டியில் வைத்து உணவு விநியோகம் செய்வதாக செய்தி வெளியானதை அடுத்து தாமாக முன் வந்து வழக்குப்பதிவு செய்த மாநில மனித உரிமைகள் ஆணையம், சென்னை மாநகராட்சி ஆணையர் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது.

சென்னை திருவொற்றியூர் மண்டலத்தில் 14 வார்டுகளில் கரோனா தடுப்புப் பணியில் களப்பணியாளர்கள் மற்றும் தன்னார்வலர்கள் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர். இவர்களுக்குத் தேவையான உணவைத் தயாரித்து எடுத்துச் செல்ல வாகனம் இல்லாததால், குப்பை வண்டியில் வைத்து விநியோகித்ததாகக் கூறப்படுகிறது.

மேலும், களப்பணியாளர்கள் மற்றும் தன்னார்வலர்களுக்கு வழங்கப்படும் உணவை முகக்கவசம் அணியாமல் சுகாதாரமற்ற முறையில் தயாரித்து வழங்குவதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. மாநகராட்சி உயர் அதிகாரிகளுக்கு மட்டும் உயர்தர உணவு வழங்கப்படுவதாகவும், கடைநிலை ஊழியர்களுக்குச் சுகாதாரமற்ற உணவும் வழங்கப்படுவதாகவும் பத்திரிகையில் செய்தி வெளியானது.

பத்திரிகையில் வெளியான செய்தியின் அடிப்படையில் மாநில மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்த (suo-moto) ஆணைய உறுப்பினர் சித்தரஞ்சன் மோகன்தாஸ், சென்னை மாநகராட்சி ஆணையர் 3 வாரத்தில் விரிவான விசாரணை அறிக்கையைத் தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in