Last Updated : 31 Jul, 2020 05:48 PM

 

Published : 31 Jul 2020 05:48 PM
Last Updated : 31 Jul 2020 05:48 PM

புதுச்சேரியில் இறந்தவருக்குக் கரோனா தொற்று: இறுதிச் சடங்குக்குப் பிறகு தெரியவந்தது; 150க்கும் மேற்பட்டோருக்குப் பரிசோதனை

புதுச்சேரி மாநிலத்தில் இறுதிச் சடங்குக்குப் பிறகு இறந்தவருக்குக் கரோனா தொற்று இருப்பது தெரியவந்ததால், இறுதி ஊர்வலத்தில் பங்கேற்ற 150-க்கும் மேற்பட்ட கிராம மக்களுக்கு சிறப்பு முகாம் நடத்தி உமிழ்நீர் மாதிரியை சுகாதாரத்துறையினர் எடுத்துள்ளனர்.

புதுச்சேரி வில்லியனூர் கூடப்பாக்கம் கிராமம், தர்மபுரி நகரைச் சேர்ந்தவர் கந்தசாமி, ஓட்டுநர். இவர் உடல்நிலை பாதிக்கப்பட்டு கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்குச் சேர்க்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி ஜூலை 20-ம் தேதி அன்று உயிரிழந்தார். அவர் உடலுக்குக் கரோனா தொற்றுப் பரிசோதனை செய்யப்பட்டது.

தொற்றுப் பரிசோதனை வருவதற்கு முன்பாக அவரது உடலை உறவினர்கள் சிபாரிசு மூலம் பெற்று அடக்கம் செய்துள்ளனர். இறுதிச் சடங்கில் அப்பகுதி மக்கள் பங்கேற்றுள்ளனர். அதன்பின்னர் வந்த பரிசோதனை முடிவில், இறந்தவருக்குக் கரோனா தொற்று இருந்தது தெரியவந்தது. இந்நிலையில், இறந்த கந்தசாமியின் குடும்பத்துக்குக் கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் அவரது குடும்பத்தைச் சேர்ந்த ஐவருக்குத் தொற்று உறுதியானது.

இதனால் இறுதி ஊர்வலத்தில் பங்கேற்ற கிராம மக்கள் கடும் அச்சத்துக்கு ஆளானார்கள். இதையடுத்து, சுகாதாரத்துறை தரப்புக்குத் தகவல் தெரிவித்தனர். அதையடுத்து, கூடப்பாக்கம் அரசுப் பள்ளியில் சிறப்பு பரிசோதனை முகாமை நடத்தினர். இதில், 150-க்கும் மேற்பட்டோருக்கு உமிழ்நீர் பரிசோதனை எடுக்கப்பட்டுள்ளது. பரிசோதனை முடிவுக்காக இறுதி நிகழ்வில் பங்கேற்றோர் தொடங்கி கிராமத்தில் பலரும் காத்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x