Published : 31 Jul 2020 05:00 PM
Last Updated : 31 Jul 2020 05:00 PM

நீதிமன்ற உத்தரவை மீறி முழு கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை: தனியார் பள்ளிகளுக்கு உயர் நீதிமன்றம் எச்சரிக்கை

பிரதிநிதித்துவப் படம்.

சென்னை

கரோனா தொற்று காரணமாக ஊரடங்கில் பள்ளிகள் திறக்காத நிலையில் பள்ளிகள் 40 சதவீதக் கட்டணத்தை மட்டும் வசூலிக்கலாம் என்ற உயர் நீதிமன்ற உத்தரவை மீறி முழு கட்டணம் வசூலிப்பதாக அரசு தெரிவித்தது. இதன்பேரில், தனியார் பள்ளிகள் பட்டியலைத் தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதி, நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளார்.

கரோனா தொற்று காரணமாக மார்ச் 24-ம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு ஆகஸ்டு 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பள்ளி, கல்லூரிகள் திறக்காத நிலையில் பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்த அரசு அனுமதித்துள்ளது.

கரோனா பரவலைத் தடுக்க ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகம் முழுவதும் உள்ள தனியார் பள்ளிகளில் கல்விக் கட்டணங்களை வசூலிக்கக்கூடாது என்று தமிழக அரசு கடந்த ஏப்ரல் 20-ம் தேதி அரசாணை பிறப்பித்தது. அதேசமயம், ஆசிரியர்கள், ஊழியர்களுக்கு ஊதியம் வழங்கவும் அறிவுறுத்தியது.

இந்த அரசாணையை ரத்து செய்யக் கோரியும், அதற்குத் தடை விதிக்கக் கோரியும் தமிழ்நாடு தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு மற்றும் அகில இந்திய தனியார் கல்வி நிறுவனங்களின் கூட்டமைப்புகள் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.

இந்த வழக்கில் 75 சதவீதக் கட்டணத்தை மூன்று தவணைகளாகவும், 25 சதவீதக் கட்டணத்தை பள்ளி திறக்கப்படும்போதும் வசூலிக்கலாம் என தமிழக அரசு பதில் அளித்தது.

ஆனால், இதை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் பிறப்பித்த இடைக்கால உத்தரவில், நடப்புக் கல்வி ஆண்டிற்கான கட்டணம் இன்னும் இறுதி செய்யப்படாததால், சென்ற ஆண்டு வசூலித்த கட்டணத்தின் அடிப்படையில், தமிழகம் முழுதுமுள்ள அனைத்து தனியார் கல்வி நிறுவனங்களும் 2020 - 2021 ஆம் ஆண்டுக்கான கல்விக் கட்டணத்தில் 40 சதவீதத் தொகையை ஆகஸ்ட் 31-ம் தேதிக்குள் வசூலித்துக் கொள்ளலாம், மற்ற கட்டணங்கள் குறித்து பின்னர் முடிவு செய்யப்படும் என அனுமதி அளித்தார்.

இந்நிலையில், உயர் நீதிமன்ற உத்தரவை மீறி, பள்ளிகள் முழு கட்டணத்தையும் பெற்றோர்களிடமிருந்து இருந்து வசூலிப்பதாக, நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன் ஆஜராகி தமிழக அரசு சார்பாக அரசு வழக்கறிஞர் அன்னலட்சுமி முறையிட்டார்.

இதைக் கேட்ட நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், எந்தெந்தப் பள்ளிகள் உத்தரவை மீறி கட்டணம் வசூலிக்கின்றன என்று ஆகஸ்ட் 17-ம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் எனவும், பள்ளிகள் முழு கட்டணத்தை வசூலித்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பள்ளிகளுக்கு எச்சரிக்கை விடுத்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x