Last Updated : 31 Jul, 2020 03:21 PM

 

Published : 31 Jul 2020 03:21 PM
Last Updated : 31 Jul 2020 03:21 PM

கடல் பசுக்களை பாதுகாக்க இரட்டை மடி வலைக்கான தடையை முறையாக அமல்படுத்த வேண்டும்: உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு

மதுரை

கடல் பசுக்கள் அழிவதைத் தடுக்க ஆழ்கடல் பகுதிகளில் இரட்டை மடி வலையைப் பயன்படுத்த விதிக்கப்பட்டுள்ள தடையை முறையாக அமல்படுத்த வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

மதுரையைச் சேர்ந்த புஷ்பவனம் உயர்நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு:

இந்தியாவில் தமிழகம், குஜராத்தில் கடல் பசுக்கள் உள்ளன. தமிழகத்தில் ராமநாதபுரம், புதுக்கோட்டை மாவட்டங்களில் கடல் பசுக்கள் உள்ளன. இந்தியா முழுவதும் 200 கடல் பசுக்கள் இருப்பதாக இந்திய வனவிலங்கு நிறுவனம் சமீபத்தில் தெரிவித்தது.

கடல் பசு கடலில் உள்ள புற்களை மட்டுமே உணவாக உட்கொள்ளும். ஆழ்கடலில் மீன்பிடிக்கும் செல்லும் கப்பல்களால் ஆழ்கடல் பகுதியிலுள்ள புற்கள் அழிந்துவிடுகின்றன. இதனால் கடல் பசுக்கள் உணவின்றி உயிரிழக்கின்றன.

ராமநாதபுரம் மாவட்டத்தில் சில மாதங்களுக்கு முன்பு 3 முதல் 4 வயதுக்கு உட்பட்ட கடல் பசு உடல் மற்றும் கண்களில் காயங்களுடன் இறந்து கிடந்தது.

தமிழக கடல் பகுதியில் அதிராமபட்டினம் முதல் அம்மாபட்டினம் வரை கடல் பசு பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்க இந்திய வனவிலங்கு நிறுவனம் ஏற்கெனவே பரிந்துரை செய்துள்ளது.

இந்த பரிந்துரையை அமல்படுத்த அதிகாரிகளுக்கு மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே கடல் பசுக்களை பாதுகாக்க இந்திய வனவிலங்கு நிறுவனத்தின் பரிந்துரையை அமல்படுத்த உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனுவை நீதிபதிகள் சத்யநாராயனன், ராஜமாணிக்கம் அமர்வு விசாரித்தது. அப்போது கடலில் வாழும் கடல் பசுக்கள் அழிவதைத் தடுக்க ஆழ்கடல் பகுதிகளில் இரட்டை மடி வலை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த தடையை முறையாக அமல்படுத்த வேண்டும் என்றனர்.

பின்னர், இந்த வழக்கில் இந்திய வனவிலங்கு நிறுவனத்தை ஒரு எதிர் மனுதாரராக சேர்த்த நீதிபதிகள், மனு தொடர்பாக மத்திய மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஆக.28- ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x