Published : 31 Jul 2020 10:08 AM
Last Updated : 31 Jul 2020 10:08 AM

உள்ளூர் அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தி உயர் அலுவலர்களுக்கு மிரட்டல் என புகார்; திருப்பூர் மாவட்ட உதவி செய்தி மக்கள் தொடர்பு அலுவலருக்கு நோட்டீஸ்

உதவி செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் சதீஷ்குமார்.

திருப்பூர்

உள்ளூர் அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தி உயர் அலுவலர்களுக்கு மிரட்டல் விடுத்தது உள்ளிட்ட பல்வேறு பிரச்சினை தொடர்பாக, பதவி உயர்வு பெற்ற திருப்பூர் மாவட்ட உதவி செய்தி மக்கள் தொடர்பு அலுவலருக்கு, செய்தி மக்கள் தொடர்புதுறை இயக்குநர் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.

திருப்பூர் மாவட்ட உதவி செய்தி மக்கள் தொடர்பு அலுவலராக (விளம்பரம்) இருந்தவர் மா.சதிஷ்குமார் (34). தாராபுரத்தைச் சேர்ந்தவர். இவர் கடந்த இரு நாட்களுக்கு முன்பு, திண்டுக்கல் மாவட்டத்துக்கு உதவி செய்தி மக்கள் அலுவலராக (செய்தி) பதவி உயர்வு பெற்றார். இந்நிலையில், அவருக்கு செய்தி மக்கள் தொடர்பு இயக்குநரும், அரசின் கூடுதல் செயலருமான பொ.சங்கர் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.

அதில் கூறியிருப்பதாவது:

"கரோனா வைரஸ் தொற்றால் அரசு ஊரடங்கு உத்தரவு அறிவிக்கப்பட்ட பின்னர், மார்ச் 24-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 14-ம் தேதி வரை 22 நாட்களும், ஏப்ரல் 16 தொடங்கி மே 3-ம் தேதி வரை 18 நாட்கள் மற்றும் மே 5-ம் தேதி தொடங்கி 20-ம் தேதி 16 நாட்களும், கரோனா நோய்த்தடுப்பு விழிப்புணர்வு விளம்பர பணிக்கு வராமல், உயர் அலுவலர்களுக்குத் தகவல் தெரிவிக்காமல் இருந்துள்ளீர்கள். உடன் வேலை செய்த அலுவலருடன் சண்டையிட்டு, அவருடன் இணைந்து அலுவலக விளம்பரப் பணிகளை செய்ய ஒத்துழைக்காமல் இருந்துள்ளீர்கள்.

அலுவலகத்தில் பணியாற்றும் அனைத்துப் பணியாளர்களையும் ஒருமையில் பேசுவது மற்றும் மரியாதை இன்றி நடத்தி உள்ளீர்கள். பொறுப்புள்ள பணியில் இருந்தும் பொறுப்பற்ற முறையில் நடந்து அரசுப் பணிக்குக் குந்தகம் ஏற்படுத்தி உள்ளீர்கள். அரசின் சாதனை விளக்கப்படக் காட்சிகளுக்கு செல்லாமல் இருப்பதுடன், அலுவலகப் பணிகளை நிராகரித்து வந்துள்ளீர்கள்.

உள்ளூர் அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தி உயர் அலுவலர்களை மிரட்டி வருவதன் மூலம், அதிகார துஷ்பிரயோகம் செய்துள்ளீர்கள். அலுவலகத்தில் பணியாற்றும் ஓட்டுநரை, தங்களது சொந்த வாகனம் ஓட்ட வைத்துள்ளீர்கள்.

பொறுப்புமிக்க பதவியினை வகித்து வரும் தாங்கள் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலரின் உத்தரவினை மதிக்காமல், சக அலுவலகப் பணியாளர்களிடம் சுமூகமான முறையில் இணைந்து பணியாற்றாமலும் அவர்கள் மீது தவறான செய்தியை பரப்பி வந்துள்ளீர்கள்"

இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இத்துடன் பல்வேறு விஷயங்கள் அதில் குறிப்பிடப்பட்டு, வரும் 15 நாட்களுக்குள் உரிய விளக்கம் அளிக்க வேண்டும் எனவும், தவறும் பட்சத்தில் ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x