Published : 31 Jul 2020 09:38 AM
Last Updated : 31 Jul 2020 09:38 AM

பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப் பிரிவினருக்கு இடஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக எந்த முடிவும் எடுக்கப்படவில்லை: உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்

சென்னை

தமிழகத்தில் பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப் பிரிவினருக்கு கல்வி, வேலைவாய்ப்பில் 10 சதவீத இடஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்று உயர் நீதிமன்றத்தில் அரசு தெரிவித்துள்ளது. பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப் பிரிவினருக்கு கல்வி, வேலைவாய்ப்பில் 10 சதவீத இடஒதுக்கீடு வழங்க வகைசெய்யும் விதமாக மத்திய அரசு சட்டம் இயற்றியது. இந்த இடஒதுக்கீடு சலுகையைப் பெற, சம்பந்தப்பட்டவர்கள் அந்தந்த வட்டாட்சியர்களிடம் சொத்து, வருமானச் சான்று பெற்று சமர்ப்பிக்க வேண்டும்.

ஆனால், இந்த சான்றுகள் வழங்குவதை நிறுத்திவைக்குமாறு வருவாய் நிர்வாக ஆணையர் உத்தரவிட்டு இருந்தார். இதை எதிர்த்து பல்வேறு சங்கங்கள் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன. நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஆர்.ஹேமலதா அமர்வில் இந்த வழக்குகள் நேற்று விசாரணைக்கு வந்தன. அப்போது அரசு தரப்பில், ‘‘இந்த சான்றிதழ்களை வழங்க வேண்டாம் எனபிறப்பிக்கப்பட்ட உத்தரவு திரும்பப் பெறப்பட்டுவிட்டது.

ஆனால், இந்த சான்றிதழ்களை மத்திய அரசின் கல்வி, வேலைவாய்ப்புக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டது. தமிழகத்தில் பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப் பிரிவினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை’’ என்று தெரிவிக்கப்பட்டது. மனுதாரர்கள் தரப்பில், ‘‘தமிழக அரசு வழங்கும் சொத்து, வருமான சான்றிதழ்களை மத்திய அரசு கல்வி நிறுவனங்கள், மத்திய அரசின் வேலைவாய்ப்புகளுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்ற நிபந்தனையை நீக்க வேண்டும். பிற மாநிலங்களிலும் இந்த சான்றிதழ்களை பயன்படுத்திக்கொள்ள அனுமதிக்க வேண்டும்’’ என்று கோரப்பட்டது.

அதற்கு அரசு தரப்பில், ‘‘தமிழகத்தில் வழங்கப்படும் சான்றிதழ்களை பிற மாநிலங்களில் பயன்படுத்துவது குறித்து அந்தந்த மாநிலங்கள்தான் முடிவு செய்ய முடியும்’’ என்று தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, இந்த வழக்கை முடித்துவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x