Published : 31 Jul 2020 09:13 AM
Last Updated : 31 Jul 2020 09:13 AM

கரோனா வைரஸ் வேகமாக பரவுவதால், பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு பொது இடங்களில் ஒட்டகம், ஆடு, மாடு போன்றவற்றை பலியிடக் கூடாது: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு  

தமிழகத்தில் கரோனா வைரஸ் பரவி வருவதால் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு பொது இடங்களில் ஒட்டகம், ஆடு, மாடு போன்றவற்றை பலியிட அனுமதிக்கக் கூடாது என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் மதுரை வட இந்தியர் நலச்சங்கத் தலைவர் ஜெ.ஹூக்கும் சிங் என்பவர் தாக்கல் செய்திருந்த மனுவில், ‘‘கரோனா தொற்று தமிழகத்தில் வேகமாக பரவி வருகிறது. இஸ்லாமியர்கள் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு ஒட்டகம், ஆடு, மாடு போன்ற விலங்குகளை பொது இடங்களில் பலியிடுவதைவழக்கமாகக் கொண்டுள்ளனர்.

இதற்காக வடமாநிலங்களில் இருந்து ஒட்டகங்கள் சட்டவிரோதமாகக் கொண்டு வரப்பட்டு குர்பானி கொடுப்பதற்காக பலியிடப்படுகின்றன. விலங்குகள் பலியிடப்படுவதை தடை செய்ய பல்வேறு சட்டங்கள் இருந்த போதும், அதிகாரிகளும் அதற்கு எந்த தடையும் விதிப்பதில்லை. எனவே பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு விலங்குகளை பொது இடங்களி்ல் பலியிட தடை விதிக்கவேண்டும்’’ என கோரியிருந்தார். இந்த வழக்கு விசாரணை நீதிபதிகள் வினீத் கோத்தாரி, கிருஷ்ணன் ராமசாமி ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று நடந்தது.

அப்போது மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் கே.ஆர்.லட்சுமண் ஆஜராகி, ‘‘தற்போதுள்ள அசாதாரண கரோனா காலகட்டத்தில் பொது இடங்களில் விலங்குகளை பலியிட தடைவிதித்து கடந்த ஜூன் 20-ம் தேதி மத்திய அரசு அறிவிப்பாணை வெளியிட்டுள்ளது. அதைத்தொடர்ந்து, மகாராஷ்டிரா மாநில அரசும் பக்ரீத் பண்டிகையை பொது இடங்களில் நடத்த வேண்டாம் என்றும், வீட்டிலேயே எளிமையான முறையில் கொண்டாட வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது’’ என்றார். அப்போது அரசு தரப்பில் சிறப்பு வழக்கறிஞர் ஏ.ஸ்ரீஜெயந்தி ஆஜராகி, ‘‘இதுதொடர்பாக அரசின் கருத்தை கேட்டு தெரிவிக்க அவகாசம் தேவை’’ என்றார்.

ஆனால் நீதிபதிகள், ‘ஒரு நாட்டின் பெருமையும், மதிப்பும் விலங்குகளை எப்படி பராமரிக்கிறோம் என்பதில்தான் தீர்மானிக்கப்படுகிறது’ என தேசப்பிதாமகாத்மா காந்தி தெரிவித்துள்ளார். பக்ரீத் பண்டிகை நாளையோ (இன்று) அல்லது நாளை மறுநாளோ கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில் தமிழக அரசு ஆக.31 வரை கரோனா பொது முடக்கத்தை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது. எனவே இதற்காக காலஅவகாசம் அளிக்க முடியாது. மேலும் பொது இடங்களில் விலங்குகளை பலியிட தடைவிதித்து மத்திய அரசு ஏற்கெனவே அறிவிப்பாணை பிறப்பித்துள்ள தால் அதை தமிழக அரசு கண்டிப்பான முறையில் அமல்படுத்த வேண்டும்.

இதுதொடர்பாக மகாராஷ்டிரா மற்றும் கர்நாடகா மாநில அரசுகள் விதிகளை வெளியிட்டுள்ளதுபோல தமிழக அரசும் உரிய விதிகளை வெளியிட வேண்டும். குறிப்பாக ஒட்டகம், ஆடு, மாடு போன்றவற்றை அனுமதிக்கப்பட்டுள்ள, அங்கீகரிக்கப்பட்ட வதைக் கூடங்களைத் தவிர்த்து, எக்காரணம் கொண்டும் பொது இடங்களில் பலியிட அனுமதிக்கக் கூடாது. விலங்குகள் பலியிடல் தொடர்பாக மத்திய அரசு மற்றும் உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவுகளை தமிழக அரசு அமல்படுத்தும் என எதிர்பார்க்கிறோம்.

மறைந்த முன்னாள் பிரதமர்நேரு, ‘விலங்குகளிடம் அன்பு செலுத்த வேண்டும்’ எனக் கூறியுள்ளார். ஆகவே அவருடைய கூற்றை ஏற்று அரசியல் தலைவர்களும், மதத் தலைவர்களும் சமூக செயற்பாட்டாளர்களும் விலங்குகள் வதைக்கு எதிராக பிரச்சாரம் செய்ய வேண்டும். எனவே இதுதொடர்பாக தமிழக அரசு 3 வாரங்களுக்குள்பதில் அளிக்க வேண்டும். அத்துடன் இந்த உத்தரவை அமல்படுத்தியது தொடர்பாகவும் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு விசாரணையை ஆக.20-ம் தேதிக்கு தள்ளிவைத் துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x