Published : 31 Jul 2020 07:09 AM
Last Updated : 31 Jul 2020 07:09 AM

சிறுமி பாலியல் வழக்கில் கைதான முன்னாள் எம்எல்ஏ நாஞ்சில் முருகேசன் அரசு மருத்துவமனையில் அனுமதி

சிறுமி பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் எம்எல்ஏ நாஞ்சில் முருகேசனுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

நாகர்கோவிலில் கோட்டாறைச் சேர்ந்த 15 வயது மாணவி ஒருவர் கடந்த 2017-ம் ஆண்டில் இருந்தே பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இச்சம்பவத்தில் நாகர்கோவில் தொகுதி முன்னாள் அதிமுக எம்எல்ஏ நாஞ்சில் முருகேசன், சிறுமியின் தாயார் உட்பட 5 பேர் மீது நாகர்கோவில் மகளிர் காவல் நிலையத்தில் போக்ஸோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

பணத்துக்காக சிறுமியின் தாயாரே, அவரை தவறான பாதைக்கு தள்ளியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியது. இவ்வழக்கில் தொடர்புடைய மேலும் பலர்சிக்குவார்கள் என்பதால் போலீஸார் வழக்கை தீவிரப்படுத்தினர். 4 பேரை போலீஸார் கைது செய்திருந்த நிலையில், தலைமறைவான நாஞ்சில்முருகேசனை பிடிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டிருந்தன.

திருநெல்வேலி மாவட்டம் உவரியில் வைத்து நேற்று முன்தினம் நாஞ்சில் முருகேசனை தனிப்படை போலீஸார் கைது செய்தனர். நாகர்கோவில் அழைத்து வரப்பட்ட அவரிடம்,மகளிர் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தப்பட்டது. அவரை, ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் பரிசோதித்த போது, குறைந்த ரத்த அழுத்தம் மற்றும் உடல் நலக்குறைவு இருந்தது தெரியவந்தது. அவருக்கு ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x