Last Updated : 31 Jul, 2020 06:44 AM

 

Published : 31 Jul 2020 06:44 AM
Last Updated : 31 Jul 2020 06:44 AM

நெருங்கும் பேரவைத் தேர்தல்.. ரகசிய பேச்சுவார்த்தைகள்: அதிமுக, திமுக கூட்டணிகளில் மாற்றங்கள் வருமா?

தமிழக சட்டப்பேரவை தேர்தல் நெருங்குவதால், அரசியல் கட்சிகள் சுறுசுறுப்பாகத் தொடங்கியுள்ளன. முக்கிய கட்சிகளின் தலைவர்கள் ரகசியமாக பேச்சுவார்த்தைகள் நடத்தி வருகின்றனர். இதனால், அதிமுக, திமுக கூட்டணியில் மாற்றங்கள் வருமா என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல்தேதி அறிவிக்கப்பட இன்னும் 7 மாதங்களே உள்ளன. கரோனாவால் முடங்கியிருந்த அரசியல் நடவடிக்கைகள் மெல்ல வேகமெடுக்க தொடங்கியுள்ளன. தற்போதைய நிலையில் தமிழகத்தில் அதிமுக, திமுக தலைமையில் இரு கூட்டணிகள் உள்ளன. கடந்த 2019 மக்களவைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாமக, பாஜக, தேமுதிக, தமாகா, புதிய தமிழகம், புதிய நீதிக் கட்சி ஆகியவை அங்கம் வகித்தன.

இதில், நாங்குநேரி இடைத்தேர்தலின்போதே அதிமுகவுக்கு புதிய தமிழகம் ஆதரவு அளிக்கவில்லை. சிறுபான்மையினர் வாக்கு வங்கி, கடந்த மக்களவைத் தேர்தல் தோல்வி போன்ற பல்வேறு காரணங்களால் பாஜகவுடன் கூட்டணி தொடர்வதை அதிமுக விரும்பவில்லை. தமாகா தலைவர்ஜி.கே.வாசனுக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவி வழங்கப்பட்டுள்ளதால் அக்கட்சி அதிமுக கூட்டணியிலேயே தொடரும். ஒருவேளை ஜி.கே.வாசன் மத்திய அமைச்சரானால் பாஜக எந்த பக்கம் இருக்கிறதோ, அங்கு தமாகா செல்லும்.

எக்காரணத்தை முன்னிட்டும் பாமகவை விட்டுவிடக் கூடாது என்று அதிமுக கருதுகிறது. கடந்த 2016-ல் அன்புமணியை முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தி தோல்வியை சந்தித்த பாமக, இந்த தேர்தலில் வெற்றிபெறும் கூட்டணியில் இடம்பெற்று 25 முதல்30 எம்எல்ஏக்களை பெற வேண்டும் என்று நினைக்கிறது.

தற்போதைய நிலையில் திமுக கூட்டணி வலிமையாகவே உள்ளது.

அதிமுக கூட்டணியில் இருந்து பாமக வெளியேறினால் திமுக கூட்டணியிலும் மாற்றங்கள் ஏற்படவாய்ப்பு உண்டு. பாமக இருக்கும் இடத்தில் விடுதலைச் சிறுத்தைகள் இருக்க வாய்ப்புகள் மிகமிக குறைவு. விசிக-வின் 2 எம்.பி.க்களில் ஒருவர் திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வென்றதால் அக்கட்சி கூட்டணி மாற வாய்ப்பு இல்லை.

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி. இந்திய ஜனநாயகக் கட்சியின்எம்.பி.க்களும் திமுக சின்னத்தில் வென்றதால் அவர்கள் திமுக கூட்டணியிலேயே தொடர்வார்கள். வரும் பேரவைத் தேர்தலில் மதிமுகவின் நிலையிலும் மாற்றம் இருக்காது.

திமுக கூட்டணியில் தொடர வேண்டும் என்பதே காங்கிரஸின் விருப்பம். ஆனால், கடந்த 2016 தேர்தலில் ஒதுக்கிய 41 தொகுதிகள் இந்த முறை கிடைக்குமா என்பது சந்தேகம். அதிக கட்சிகள் இருப்பதை காரணம் காட்டி தொகுதிகளின் எண்ணிக்கையை திமுககுறைத்துவிடும். இது தமிழகத்தில் காங்கிரஸை மேலும் பலவீனமாக்கும் என்பதால், கூட்டணிக்கான மாற்று வழிகளை ஆராய்ந்து, திமுகவிடம் அதிக இடங்களைப் பெற வேண்டும் என்று காங்கிரஸ் மேலிடத் தலைவர்களிடம் சில தமிழக தலைவர்கள் வற்புறுத்திவருவதாகக் கூறப் படுகிறது.

இப்படி கூட்டணிகணக்குகளைப் போட்டுப் பார்த்துவரும் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் எந்த கட்சியை கூட்டணியில் இணைக்கலாம்; யாரை வெளியேற்றலாம் என்பதற்கான ரகசிய பேச்சுகளை தொடங்கியுள்ளனர். இரு பிரதான கட்சிகளும் பாமக தலைவர்களுடன் ரகசிய பேச்சில்ஈடுபட்டு வருவதாகக் கூறப்படுகிறது.

பாஜகவுக்கு 3 வாய்ப்புகள்

அதிமுகவுடன் கூட்டணியை தொடர்வது, 2014 மக்களவைத் தேர்தல்போல 3-வது அணி அமைப்பது, ரஜினியை கட்சி தொடங்க வைப்பது என்று பாஜகவுக்கு மூன்று வாய்ப்புகள் உள்ளன.

இதற்காக பாஜக சார்பில் பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன. பாமக, ரஜினி எடுக்கும் முடிவுகளால் கூட்டணி களில் மட்டுமல்லாமல், தமிழக அரசியல் களத்திலும் மாற்றங்கள் வரலாம் என்பதே தற்போதைய நிலை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x