Published : 30 Jul 2020 09:31 PM
Last Updated : 30 Jul 2020 09:31 PM

நீர்நிலைகளைப் பாதுகாக்க ஏன் தனி அமைச்சகம் அமைக்கக்கூடாது?- உயர் நீதிமன்றம் கேள்வி

சென்னை

நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு தொடர்பாக நீதிமன்றம் பல உத்தரவுகளைப் பிறப்பித்தும் ஏன் தமிழக அரசு இதுவரை எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. நீர் ஆதாரங்களைப் பாதுகாக்க ஏன் தனி அமைச்சகம் அமைக்கக்கூடாது என்றும், நீர்நிலை ஆக்கிரமிப்புகள் குறித்துப் பதிலளிக்கவும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தருமபுரி மாவட்டம் சின்னமானசாவடியில் உள்ள ஓடை புறம்போக்கு நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி தருமபுரியைச் சேர்ந்த கலையரசி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எம் சுந்தரேஷ் மற்றும் ஆர்.ஹேமலதா அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, தமிழகம் முழுவதும் உள்ள ஓடை புறம்போக்கு நிலங்களில் அதிக அளவில் ஆக்கிரமிப்பு நடப்பதாக தினமும் நாளிதழ்களில் செய்தி வருவதாக தெரிவித்த நீதிபதிகள், ''ஆக்கிரமிப்புகளுக்குத் துணைபோகும் அதிகாரிகள் மீது ஏன் துறைரீதியாக நடவடிக்கை எடுக்கவில்லை? நீர் ஆதாரங்களைப் பாதுகாக்க ஏன் தனி அமைச்சகம் அமைக்கக்கூடாது'' என்று கேள்வி எழுப்பினர்.

மேலும், இயற்கை வளங்களை விலை கொடுத்து வளர்ச்சியைப் பெறக் கூடாது எனக் கருத்துத் தெரிவித்த நீதிபதிகள், இந்த வழக்கில் தலைமைச் செயலாளர், பொதுப்பணித்துறை மற்றும் சென்னை மாநகராட்சி ஆணையர் ஆகியோரைத் தாமாக முன்வந்து இந்த வழக்கில் சேர்த்தனர்.

பின்னர், தமிழகத்தில் உள்ள ஓடை புறம்போக்கு நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற எடுத்த நடவடிக்கைகள் தொடர்பாகவும், மழை நீர் வீணாகக் கடலில் கலப்பதைத் தடுப்பது குறித்தும் நான்கு வாரத்தில் நிலை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x