

'போகிற போக்கில் கரோனா டச் பண்ணிட்டு போயிருச்சு..' என நடிகர் வடிவேலு பாணியில் பேசி கூட்டத்தில் கலகலப்பை ஏற்படுத்தியுள்ளார் அமைச்சர் செல்லூர் ராஜூ.
கரோனோ நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து மதுரை திரும்பியுள்ள அமைச்சர் செல்லூர் ராஜூவுக்கு கோரிப்பாளையத்தில் உள்ள அதிமுக கட்சி அலுவலகம் முன்பாக அவரது ஆதரவாளர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் பட்டாசுகள் வெடித்து வரவேற்பு அளித்தனர்.
பின்பு செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய கூட்டுறவுத் துறை அமைச்சர், "வடிவேலு சொன்னது போல போகிறபோக்கில் கரோனா டச் பண்ணிட்டு போயிருச்சு இப்போது குணமடைந்து விட்டது.
என் வாழ்வில் உறுதுணையாக இருக்கும் மனைவிக்கும் தொற்று ஏற்பட்டபோது அவர் அஞ்சிவிடக்கூடாது என்பதற்காக ஆறுதல் சொல்ல சென்றபோது எனக்கும் தொற்று ஏற்பட்டது.
உரிய சிகிச்சை பெற்று இருவரும் குணமடைந்துவிட்டோம். நாளை முதல் பொதுப்பணியில் ஈடுபடவுள்ளேன்" என்று கூறினார்.
அமைச்சரை வரவேற்க அவருடைய ஆதரவாளர்கள் திரளாகக் கூடியிருந்தனர். இதனால் இப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது..
ஒரு சிலர் சமூக இடைவெளியை கடைபிடிக்கத் தவறிவிட்டனர் அவர்களை அமைச்சர் தொடர்ந்து சமூக இடைவெளியை கடைப்பிடிக்குமாறு அறிவுறுத்திக் கொண்டே இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.