

வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி காரணமாக பல மாவட்டங்களில் மழையும், நீலகிரி, கோவை மாவட்டத்தில் கனமழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்ட தகவல்:
“தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்தில் வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி காரணமாக வட கடலோர மாவட்டங்கள் வேலூர், கிருஷ்ணகிரி, சேலம், தருமபுரி, நீலகிரி, கோவை, புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும்.
கோவை, நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும்.
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக மழை பெய்த மாவட்டங்களில் விவரம்:
சின்னக்கல்லாறு (கோவை), வால்பாறை (கோவை) தலா 9 செ.மீ., சின்கோனா (கோவை), 8 செ.மீ, வால்பாறை வட்டாட்சியர் அலுவலகம் (கோவை) 7 செ.மீ., சித்தார் (கன்னியாகுமரி) 6 செ.மீ., உதகமண்டலம் (நீலகிரி), குடவாசல் (திருவாரூர்), மேல் பவானி (நீலகிரி) சிவலோகம் (கன்னியாகுமரி) தலா 4 செ.மீ., பேச்சிப்பாறை (கன்னியாகுமரி) பெரியார் (தேனி) பெரம்பலூர் (புதுக்கோட்டை) ஆர்எஸ் மங்கலம் (ராமநாதபுரம்) மாமல்லபுரம் (காஞ்சிபுரம்) தேக்கடி (தேனி) தலா 3 செ. மீ.
மீனவர்களுக்கு எச்சரிக்கை:
ஜூலை 30-ம் தேதி (இன்று) அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளிக் காற்று 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
ஜூலை 30, 31-ம் தேதிகளில் மன்னார் வளைகுடா பகுதியில் பலத்த காற்று 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
ஜூலை 31, ஆகஸ்ட் 1 தேதிகளில் அந்தமான் கடல் பகுதிகளில் பலத்த காற்று 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
ஜூலை 30 முதல் ஆகஸ்ட் 1 வரை கடலோர கர்நாடகா, லட்சத்தீவு மற்றும் மாலத்தீவு பகுதிகளில் சூறாவளிக் காற்று 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
ஜூலை 29 முதல் ஆகஸ்ட் 2 வரை கடலோர கேரளா, கர்நாடகா மற்றும் லட்சத் தீவு பகுதிகளில் சூறாவளிக் காற்று 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
ஆகஸ்ட் 2 மற்றும் 3 தேதிகளில் கடலோரக் கேரளா, கர்நாடகா மற்றும் லட்சத் தீவு பகுதிகளில் பலத்த காற்று 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
ஆகஸ்ட் 1 முதல் 3 வரை கடலோரப் பகுதிகளில் பலத்த காற்று 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
ஜூலை 30 முதல் ஆகஸ்ட் 3 வரை தென் மேற்கு மத்திய தரைக்கடல் பகுதிகளில் பலத்த காற்று 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
மீனவர்கள் மேற்கண்ட பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.
கடல் அலை முன்னறிவிப்பு:
தென் தமிழக கடலோரப் பகுதிகளில் குளச்சல் முதல் தனுஷ்கோடி வரை ஜூலை 31 இரவு 11.30 மணிவரை கடல் அலை 3.5 முதல் 4.2 மீட்டர் வரை எழும்பக்கூடும்”.
இவ்வாறு சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.