Last Updated : 30 Jul, 2020 11:09 AM

 

Published : 30 Jul 2020 11:09 AM
Last Updated : 30 Jul 2020 11:09 AM

தென்காசி விவசாயி வழக்கு: மறு உடற்கூறாய்வு செய்ய உயர் நீதிமன்ற கிளை உத்தரவு

தென்காசி மாவட்டம் வாகைகுளத்தில் வனத்துறையினர் தாக்கியதில் உயிரிழந்ததாகக் கூறப்படும் விவசாயின் உடலை மறு உடற்கூறாய்வு செய்ய உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் தடய அறிவியல் துறைத் தலைவர், தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் தடய அறிவியல் துறைத் தலைவர், பேராசிரியர் ஒருவர் அடங்கிய குழு மறு உடற்கூறாய்வு செய்ய உத்தரவு பிறப்பித்துள்ளது.

தென்காசி மாவட்டம் வாகைகுளத்தைச் சேர்ந்த பாலம்மாள் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுவினைத் தாக்கல் செய்திருந்தார்.

அதில்," கணவர் அணைக்கரை முத்து வாகைகுளம் பகுதியில் விவசாயம் செய்துவந்தார். இந்த நிலையில் ஜூலை 22-ம் தேதி இரவு 11 மணி அளவில் வனத்துறை அதிகாரிகள் விசாரிக்க வேண்டும் எனக் கூறி சிவசைலம் பகுதியில் உள்ள பங்களா குடியிருப்புப் பகுதிக்கு அழைத்துச் சென்றனர்.

இந்நிலையில், உடல்நலக்குறைவு எனக்கூறி தென்காசி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

இது குறித்து காவல் நிலையத்தில் ஜூலை 23-ல் மகன் நடராஜன் அளித்த புகாரின் அடிப்படையில், நீதித்துறை நடுவர் விசாரணை மேற்கொண்டார். அவரது விசாரணை அறிக்கையில் உடலிக் 18 வெளிப்புற காயங்கள் இருந்ததாக தெரிவிக்கப்பட்டது.

அதன் அடிப்படையில் குடும்பத்தாரிடமும் நீதித்துறை நடுவர் கையெழுத்து பெற்று கொண்டார். இந்நிலையில் 23-ம் தேதி இரவே அவசரமாக உடற்கூறு ஆய்வு செய்யப்பட்டுள்ளது.

தடய அறிவியல் துறையின் தலைவர் டாக்டர் செல்வமுருகன் இருக்கும் நிலையில், அவரது தலைமையில் இல்லாமல் இந்த உடற்கூறு ஆய்வு நடைபெற்று உள்ளது.

நல்ல உடல்நலத்துடன் இருந்த அணைக்கரை முத்து வனத்துறையினர் தாக்கியதன் காரணமாகவே உயிரிழந்துள்ளார். ஆகவே இவற்றைக் கருத்தில் கொண்டு உயிரிழந்த அணைக்கரை முத்துவின் உடலை தடய அறிவியல் துறை மருத்துவர் குழு பிரேதப் பரிசோதனை செய்யவும், தொடர்புடைய வனத்துறை அலுவலர்கள் மீது கொலை வழக்குப் பதிவு செய்யவும், வழக்கு விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றவும், உரிய இழப்பீடு வழங்கவும் உத்தரவிட வேண்டும்" எனக் கூறியிருந்தார்.

இந்த வழக்கு ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது, சீலிட்ட கவரில் அணைக்கரை முத்துவின் உடற்கூறாய்வு அறிக்கை வழங்கப்பட்டது. அதில், அணைக்கரை முத்துவின் உடலில் 4 இடங்களில் காயங்கள் இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது என நீதிபதி கூறி, வழக்கின் தீர்ப்பை ஒத்திவைத்திருந்தார்.

இந்நிலையில் இன்று வழக்கை விசாரித்த நீதிபதி பொங்கியப்பன், உயிரிழந்த விவசாயின் உடலை மறு உடற்கூறாய்வு செய்ய உத்தரவிட்டார்.

நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் தடய அறிவியல் துறை தலைவர், தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் தடய அறிவியல் துறை தலைவர், பேராசிரியர் ஒருவர் அடங்கிய குழு மறு உடற்கூறாய்வு செய்ய உத்தரவிட்டுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x