

இலங்கை போர்க்குற்றங்கள் குறித்து சர்வதேச விசாரணைக்கு ஒத்துழைக்குமாறு இலங்கை பிரதமரிடம் இந்தியா வலியுறுத்த வேண்டும் என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக நேற்று வெளியிட்ட அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது:
இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றங்கள் குறித்து சர்வதேச நீதிபதிகளை கொண்டு விசாரணை நடத்த வேண்டும் என ஐ.நா. மனித உரிமை ஆணையத்தின் விசாரணை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. போர்க்குற்றங்கள் குறித்த விசாரணைக்கு இலங்கை அரசு ஒத்துழைப்பு தரவில்லை என ஐ.நா. மனித உரிமை ஆணையம் குற்றம் சாட்டியுள்ளது.
இது இலங்கை அரசின் நியாயமற்ற தன்மையை உலக அளவில் வெளிப்படுத்துகிறது. போர்க்குற்றங்கள் மற்றும் இனப்படுகொலையில் இலங்கை அரசு ஈடுபட்டதை இந்த அறிக்கை உறுதிப்படுத்தியுள்ளது.
எனவே, போர்க்குற்றங்கள் குறித்து விசாரிக்க சர்வதேச நீதிபதிகள் குழுவை அமைக்க ஐ.நா.விடம் இந்திய அரசு முறையிட வேண்டும். இந்த விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிக்குமாறு இலங்கை பிரதமரிடம் இந்திய அரசு வலியுறுத்த வேண்டும். இதனை மத்திய பாஜக அரசிடம் தமிழக அரசு வலியுறுத்த வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.