Published : 30 Jul 2020 07:56 AM
Last Updated : 30 Jul 2020 07:56 AM
திருட்டுகளைத் தடுக்கவும், பெண்பயணிகளின் பாதுகாப்பை மேம்படுத்தவும், மாநகர பேருந்துகள் மற்றும் பணிமனைகளில் ரூ.72 கோடி செலவில் சிசிடிவி கேமராக்கள் விரைவில் பொருத்தப்பட உள்ளன.
சென்னை மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் 806 வழித்தடங்களில் 3,700-க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இவற்றில் தினமும் சராசரியாக 33 லட்சம் பேர் பயணம் செய்கின்றனர். இச்சூழலில் சென்னையில் பேருந்துகளில் அடிக்கடி திருட்டு சம்பவங்கள் நடக்கின்றன. குறிப்பாக முதியோர், பெண்களிடம் அதிகமாக திருட்டுகள் நடக்கின்றன.
இந்நிலையில் மத்திய அரசின்நிர்பயா திட்டத்தின்கீழ் மாநகரபேருந்துகளில் நடக்கும் திருட்டுகளை தடுக்கவும், பெண் பயணிகளின் பாதுகாப்பை மேம்படுத்தவும் சிசிடிவி கேமராக்கள் பொருத்த திட்டமிடப்பட்டது.
முதல்கட்டமாக சென்னையில் 21ஜி, 18பி, 23சி, 29சி உள்ளிட்ட வழித்தடங்களில் இயக்கும் 25 மாநகர பேருந்துகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு சோதனை முறையில் இயக்கப்பட்டன. தற்போது கரோனா ஊரடங்கால் மாநகர பேருந்துகள் இயக்கப்படாமல் இருக்கும் சூழலில் 2,800 மாநகர பேருந்துகளிலும், 60 பணிமனைகளிலும் விரைவில்சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட உள்ளன.
இதுதொடர்பாக அரசு போக்குவரத்து கழக உயர் அதிகாரிகள் கூறியதாவது: பேருந்துகளில் திருட்டுகளை குறைக்க, அவற்றைசிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்க முடிவு செய்துள்ளோம்.அதன்படி முதலில் மாநகர போக்குவரத்துக் கழகத்தின் 25 மாநகரபேருந்துகளில் சிசிடிவி கேமராபொருத்தப்பட்டு சோதனை முறையில் இயக்கப்பட்டன. இதை விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளோம்.
இந்த முயற்சியில் ஒவ்வொரு பேருந்துகளிலும் 3 அல்லது 4 கேமராக்கள் பொருத்தப்படும். இதற்கான நிறுவனத்தை தேர்வு செய்ய நேற்று முன்தினம் டெண்டர்வெளியிடப்பட்டுள்ளது. ரூ.72 கோடி செலவில் 80 சதவீத மாநகரபேருந்துகளிலும், 60 பணிமனைகளிலும் சிசிடிவி கேமராக்களை விரைவில் பொருத்தவுள்ளோம். ஒரே இடத்தில் இருந்து இந்த கேமராக்களை கண்காணிக்கும் வகையில் சிறப்பு மையமும் அமைக்கப்பட உள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர். கி.ஜெயப்பிரகாஷ்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT