

சாப்டூர் வனச்சரகத்தில் யானை ஒன்று மர்மான முறையில் இறந்தது தொடர்பாக தென் மண்டல வன உயிரின குற்றத் தடுப்பு பிரிவு விசாரணைக்கு உத்தரவிடக்கோரிய மனு மீதான விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.
மதுரை மேலபொன்னரகத்தைச் சேர்ந்த முத்துச்செல்வம், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு:
தமிழகத்தில் வனப்பகுதியில் யானைகள் கெடூரமாக கொல்லப்படுகின்றன. 2018-ல் மட்டும் 84 யானைகள் இறந்துள்ளன. இந்தாண்டு இதுவரை 61 யானைகள் இறந்துள்ளன. கடந்த மே மாதம் ஸ்ரீவில்லிபுத்தூர் சாப்டூர் வனப்பகுதியில் யானை ஒன்று கொடூரமான முறையில் கொல்லப்பட்டுள்ளது.
மேலும் இந்த யானை இறந்த தகவலை மறைத்து வனத்துறையினர் வனப்பகுதியில் வைத்தே யானையை எரித்துள்ளனர். இந்த சம்பவம் காரணமாக வனத்துறையை சேர்ந்த 8 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
வனங்களை பாதுகாப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் யானைகளை அழிக்கும் செயல்களை மத்திய வனக்குற்றப் புலனாய்வு பிரிவு மற்றும் மத்திய, மாநில அரசுகள் தடுக்க வேண்டும். எனவே சாப்டூர் வனப்பகுதியில் யானை கொல்லப்பட்டது, யானை எரிக்கப்பட்டது தொடர்பான வழக்கை தென் மண்டல வன உயிரின குற்றத்தடுப்பு பிரிவுக்கு மாற்றி உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதிகள் சத்திய நாராயணன், ராஜமாணிக்கம் அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அரசு வழக்கறிஞர் யானையின் உடல் பாகங்கள், எலும்புகள் பரிசோதனைக்காக சென்னை மற்றும் ஹைதராபாத் ஆய்வகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. வனத்துறையினர் 8 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். விசாரணைக்காக 3 உயர் அதிகாரிகள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது என்றார்.
இதை பதிவு செய்து அடுத்த விசாரணையை ஆகஸ்ட் 18-ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.