Published : 29 Jul 2020 08:32 PM
Last Updated : 29 Jul 2020 08:32 PM

தமிழகத்தில் 6,426 பேருக்கு கரோனா தொற்று: சென்னையில் 1,117 பேர் பாதிப்பு: 4 திருநங்கைகளுக்கு பாதிப்பு 

சென்னை

தமிழகத்தில் அதிக அளவில் 6,426 பேருக்குக் கரோனா தொற்று கண்டறியப்பட்ட நிலையில், 2 லட்சத்தை தமிழகம் கடந்து மொத்தம் 2,34,114 என்கிற எண்ணிக்கையில் உள்ளது. சென்னையில் 1,117 பேருக்குத் தொற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. புதிதாக 4 திருநங்கைகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

6,426 என்கிற மொத்த தொற்று எண்ணிக்கையில் 17.3 சதவீதத் தொற்று சென்னையில் (1,117) உள்ளது. தமிழகத்தின் மொத்த எண்ணிக்கை 2,34,114-ல் சென்னையில் மட்டும் 97,575 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இது மொத்த தமிழக எண்ணிக்கையில் 41.6 சதவீதம் ஆகும். 1,72,883 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நிலையில் மொத்த எண்ணிக்கையில் டிஸ்சார்ஜ் சதவீதம் 73.8 சதவீதமாக உள்ளது.

நாளுக்கு நாள் தமிழ்நாட்டின் மொத்த எண்ணிக்கை, ஒவ்வொரு நாள் எண்ணிக்கையையும் முறியடித்து 2.34 லட்சத்தை தமிழகம் கடந்துள்ளது. இந்திய அளவில் மகாராஷ்டிராவுக்கு அடுத்து இரண்டாவது இடத்தில் தமிழகம் தொடர்ந்து இருந்து வருகிறது.

தமிழகம் 2.34 லட்சம் தொற்று எண்ணிக்கையைக் கடந்த நிலையில், இன்று சென்னையும் 97 ஆயிரத்தைக் கடந்துவிட்டது. புலம்பெயர் தொழிலாளர்கள், அண்டை மாநிலங்களிலிருந்து தமிழகம் திரும்புவோர் தொற்றுடன் வருகின்றனர். 4 லட்சத்து 55 ஆயிரம் பேர் இதுவரை திரும்பியுள்ளனர். இதில் 5,371 பேருக்கு நோய்த்தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

ஆனால், தமிழகத்தில் குறிப்பாக சென்னைக்குள் நெரிசல் காரணமாக தொற்று கணிசமாக அதிகரித்து வருகிறது. இது தமிழகத்துக்குப் பெரிய சவாலாக உள்ளது. பொதுமக்கள் தங்களைக் கட்டுப்பாடாக வைத்துக்கொள்வதே நோய்த்தொற்றிலிருந்து காக்கும். சென்னையில் தொற்று எண்ணிக்கை குறைந்ததற்கு அதுதான் காரணம் என்று கூறப்படுகிறது.

இன்று மட்டும் வெளி மாநிலத்திலிருந்து தமிழகத்துக்கு வந்தவர்களில் 82 பேருக்குத் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அரசு அனுமதி அளித்தபின் அண்டை மாநிலம் மற்றும் வெளிநாடுகளிலிருந்து விமானம், ரயில், சாலை மார்க்கமாக வந்தவர்கள் இன்றைய தேதி வரை மொத்த எண்ணிக்கை 4,55,638.

தமிழகத்தில் உயிரிழப்பு 3,741-ஐ (சென்னை மாநகராட்சியில் உயிரிழந்த 444 பேரை இணைத்த அடிப்படையில்) கடந்துள்ளது. உயிரிழந்த 3,741 பேரில் சென்னையில் மட்டுமே 2,076 பேர் (சென்னை மாநகராட்சியில் உயிரிழந்த 444 பேரை இணைத்த அடிப்படையில்) உயிரிழந்துள்ளனர். இன்று சென்னையில் மட்டும் 21 பேர் உயிரிழந்துள்ளனர்.

மொத்த உயிரிழப்பில் சென்னையில் உயிரிழந்தவர்கள் மட்டும் 55.4 சதவீதமாகும். சென்னையின் மொத்த எண்ணிக்கையான 97,575-ல் 2,076 பேர் உயிரிழந்திருப்பதன் மூலம் மரண விகிதம் சென்னையில் 2.1% ஆக உள்ளது. தமிழக மொத்த எண்ணிக்கையில் தமிழகத்தின் மரண விகிதம் 1.6% ஆக உள்ளது.

சென்னையில் கரோனா தொற்றைக் கட்டுப்படுத்த தனிக்கவனம் செலுத்தப்படுகிறது. சென்னை மாநகராட்சி சார்பில் சென்னையில் குடிசைப் பகுதி, வருமானத்தில் பிற்பட்ட நிலையில் உள்ள பகுதி மக்கள் 28 லட்சம் மக்களைக் குறிவைத்து சமுதாய முன்னெடுப்புத் திட்டத்தை சென்னை மாநகராட்சி அமல்படுத்துகிறது. மருத்துவ முகாம்கள் மூலம் இதுவரை 6 லட்சம் பேருக்குச் சோதனை செய்யப்பட்டுள்ளதாக ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

சென்னையில் வீடு வீடாகச் சோதனை நடத்தவும், பல்ஸ் ஆக்சிமீட்டர் மூலம் சோதனை நடத்தவும், 580 மருத்துவ மையங்களை மாநகராட்சி நடத்தி வருகிறது. இதன் மூலம் சென்னையில் கடந்த 10 நாட்களாக தொற்று எண்ணிக்கை 50 சதவீதம் வரை குறைந்துள்ளது.

அகில இந்திய அளவில் தொற்று எண்ணிக்கை வேகமாக அனைத்து மாநிலங்களிலும் பரவி வருகிறது. இந்தியாவின் பல மாநிலங்களில் வேக வேகமாகத் தொற்று எண்ணிக்கையில் அதிகரித்து வருகிறது. ஆந்திரா, கர்நாடகா ஆகிய இரண்டு மாநிலங்களும் சென்னை எண்ணிக்கையைக் கடந்து சென்றுவிட்டன. பல மாநிலங்கள் அந்தப் பட்டியலில் சேர்ந்துள்ளன. இதில் அகில உலக அளவில் மகாராஷ்டிரா முதல் பத்து இடத்தில் உள்ள நாடுகளுடன் போட்டியிடுகிறது.

மகாராஷ்டிரா 3.90 லட்சத்தைக் கடந்துவிட்டது. அங்கு 3,91,440 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். உலக அளவில் 8-ம் இடத்திலிருந்த சிலியைப் பின்னுக்குத் தள்ளி பெருவுக்கு அடுத்து 8-ம் இடத்தில் மகாராஷ்டிரா உள்ளது.

அடுத்த இடத்தில் உள்ள தமிழகம் உலக அளவில் வங்கதேசத்தை பின்னுக்குத் தள்ளி 16-வது இடத்தில் உள்ளது. இந்திய அளவில் 2,34,114 என்கிற எண்ணிக்கையுடன் இரண்டாம் இடத்தில் தமிழகம் உள்ளது. டெல்லி அதற்கு அடுத்த இடத்தில் 1,32,275 என்கிற எண்ணிக்கையுடன் உலக அளவில் ஈராக்கைப் பின்னுக்குத் தள்ளி 21-வது இடத்தில் உள்ளது.

இந்திய அளவில், ஆந்திரா 1,10,297 என்கிற எண்ணிக்கையுடன் 4-வது இடத்திலும், கர்நாடகா 1,07,001 என்கிற எண்ணிக்கையுடன் 5-ம் இடத்திலும், உத்தரப் பிரதேசம் 73,951 என்கிற எண்ணிக்கையுடன் 6-ம் இடத்திலும், மேற்கு வங்கம் 62,964 என்கிற எண்ணிக்கையுடன் 7-ம் இடத்திலும், குஜராத் 57,982 எண்ணிக்கையுடன் 8-ம் இடத்திலும், தெலங்கானா 57,142 என்கிற எண்ணிக்கையுடன் 9-ம் இடத்திலும், பிஹார் 43,843 என்கிற எண்ணிக்கையுடன் 10-வது இடத்திலும் உள்ளன.

இன்று சென்னை உள்ளிட்ட 37 மாவட்டங்களில் தொற்று எண்ணிக்கை வந்துள்ளது. சென்னையைத் தவிர 36 மாவட்டங்களில் 5,309 பேருக்குத் தொற்று உள்ளது. இதில் சென்னையைத் தவிர வேறு சில மாவட்டங்களிலும் நான்கு இலக்கத்தில் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. செங்கல்பட்டு, திருவள்ளூரை அடுத்து மதுரையும் 10 ஆயிரம் என்கிற எண்ணிக்கையைக் கடந்துவிட்டது.

சென்னை, உலக அளவில் ஈராக்குக்கு அடுத்தபடியாக இந்தோனேசியாவைப் பின்னுக்குத் தள்ளி 97,575 என்கிற எண்ணிக்கையுடன் 24-வது இடத்தில் உள்ளது.

* தற்போது 58 அரசு ஆய்வகங்கள், 61 தனியார் ஆய்வகங்கள் என 119 ஆய்வகங்கள் உள்ளன.

இந்த நிலையில் பொது சுகாதாரத்துறை தமிழகத்தில் கரோனா நோயாளிகள் எண்ணிக்கை, நிலை குறித்து இன்று வெளியிட்ட அறிவிப்பு:

* டிஸ்சார்ஜ் ஆனவர்கள் போக தனிமைப்படுத்துதலில் உள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 57,490. இது மொத்த தொற்று எண்ணிக்கையில் 24.5 சதவீதம் ஆகும்.

* மொத்தம் எடுக்கப்பட்ட மாதிரிகளின் எண்ணிக்கை 25,36,660. இது மொத்த தமிழக மக்கள்தொகையில் 3.1 சதவீதம் ஆகும்.

* இன்று ஒரு நாளில் எடுக்கப்பட்ட சோதனை மாதிரி எண்ணிக்கை 60,794. இது .07 சதவீதம் ஆகும்.

* மொத்தம் 100 பேரில் உறுதிப்படுத்தப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை 10.5 சதவீதம்.

* மொத்தம் தொற்று உள்ளவர்கள் எண்ணிக்கை 2,34,114.

* இன்று தொற்று உறுதியானவர்கள் எண்ணிக்கை 6,426.

* மொத்தம் (2,34,114) தொற்று உள்ளவர்கள் எண்ணிக்கையில் ஆண்கள் 1,42,055 பேர் (60.6 %) / பெண்கள் 92,032 பேர் (39.3 %)/ மூன்றாம் பாலினத்தவர் 27 பேர் ( .1%)

* தொற்று உறுதியானவர்களில் ஆண்கள் 3892 (60.5 %) பேர். பெண்கள் 2,530 (39.5 %) பேர்.

* இன்று டிஸ்சார்ஜ் ஆனவர்கள் 5927 பேர். மொத்தம் டிஸ்சார்ஜ் ஆனவர்கள் 1,72,883 பேர் (73.8 %).

* இன்று கரோனா வைரஸ் நோய்த் தொற்றினால் 82 பேர் உயிரிழந்தனர். இதில் 28 பேர் தனியார் மருத்துவமனையிலும், 54 பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்தனர். இந்நிலையில் உயிரிழப்பு எண்ணிக்கை 3,741 ஆக உள்ளது. அதில் சென்னையில் மட்டுமே 2,076 பேர் உயிரிழந்துள்ளனர்.

உயிரிழப்புகள் அதிக அளவில் கவலை ஏற்படுத்தும் வண்ணம் உள்ளன. உயிரிழப்புகளில் இளவயது மரண விகிதம் அதிக அளவில் உள்ளன. உயிரிழந்த 82 பேரில் 50 வயதுக்கு உட்பட்டோர் 18 பேர் ஆவர். இது 21.9 சதவீதம் ஆகும். 40 வயதுக்கு உட்பட்டவர் 5 பேர். அரியலூரைச் சேர்ந்த 22 வயது கர்ப்பிணிப் பெண், நாகப்பட்டினத்தைச் சேர்ந்த 20 வயது பெண் ஆகியோர் அடக்கம். இதில் கரோனாவால் உயிரிழந்ததில் ஆண்கள் 57 பேர் (69.5 %). பெண்கள் 25 (30.5%) பேர்.

முக்கியப் பிரச்சினையாக சுவாசப் பிரச்சினை, மாரடைப்பு, கோவிட் நிமோனியா ஆகியவை அதிக அளவு மரணத்துக்குக் காரணமாக உள்ளன. நீண்டகால நோய் பாதிப்பால் பாதிக்கப்பட்டிருந்தவர்கள் 75 பேர், எவ்விதப் பாதிப்பும் இல்லாதவர்கள் 7 பேர்.

சென்னையைத் தவிர மற்ற மாவட்டங்களில் வேகமாகத் தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. சென்னையைத் தவிர்த்து மற்ற 36 மாவட்டங்களின் மொத்த எண்ணிக்கை 5,309.

இந்திய அளவில் மும்பை போன்ற சில பெருநகரங்களின் தொற்று எண்ணிக்கைக்கு இணையாக சென்னை செல்கிறது. இன்று தமிழகத்தின் மொத்த நோய்த்தொற்று உள்ளவர்களில் சென்னையில் மட்டும் 41.6 சதவீதத்தினர் உள்ளனர். மற்ற 36 மாவட்டங்களில் 58.4 சதவீதத்தினர் உள்ளனர். மதுரை மாவட்டத்தில் மிக வேகமாகத் தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

தமிழகத்தில் இன்று தொற்று கண்டறியப்பட்ட 37 மாவட்டங்களில் சென்னைக்கு அடுத்தபடியாக செங்கல்பட்டு 13,841, திருவள்ளூர் 13,184, மதுரை 10,618, காஞ்சிபுரம் 8,422, விருதுநகர் 7,256, தூத்துக்குடி 6,591, திருவண்ணாமலை 5,823, வேலூர் 5,492, திருநெல்வேலி 4,729, தேனி 4,468, ராணிப்பேட்டை 4,491, கன்னியாகுமரி 4,275, கோவை 4,344, திருச்சி 3,889, கள்ளக்குறிச்சி 3,633, சேலம் 3,428, விழுப்புரம் 3,499, ராமநாதபுரம் 3169, ஆகியவை 3,000 எண்ணிக்கைக்கு மேல் உள்ள மாவட்டங்கள் ஆகும்.

அனைத்து மாவட்டங்களும் 100 என்கிற தொற்று எண்ணிக்கையை இன்று கடந்துவிட்டன. அதாவது 37 மாவட்டங்களிலும் இன்றைய தொற்று எண்ணிக்கை 100-க்கு மேல் உள்ளன.

10 மாவட்டங்களில் தொற்று எண்ணிக்கை 3 இலக்கத்தில் உள்ளன. 23 மாவட்டங்கள் 4 இலக்கத்தில் உள்ளன. சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், மதுரை தொற்று எண்ணிக்கை 5 இலக்கத்தில் உள்ளது. 9 மாவட்டங்கள் 500 என்கிற எண்ணிக்கையைத் தாண்டிவிட்டன. 2 மாவட்டங்கள் 500-க்குள் உள்ளன. இன்று தமிழகத்தில் 37 மாவட்டங்களில் தொற்று உறுதியாகியுள்ளது.

அனைத்து மாவட்டங்களிலும் தொற்று எண்ணிக்கை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. இதுதவிர வெளிநாடுகள், வெளி மாநிலங்களிலிருந்து வந்தவர்களில் இன்று 82 பேருக்குத் தொற்று உறுதியாகியுள்ளது. மொத்தமாக இதுவரை வெளி மாநிலங்களிலிருந்து தொற்றுடன் வந்தவர்கள் 5,371 பேர்.

நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில், 12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் 11,697பேர் (4.9%). இதில் ஆண் குழந்தைகள் 6143 பேர் (52.5%). பெண் குழந்தைகள் 5,554 பேர் (47.5%).

13 வயது முதல் 60 வயது வரை உள்ளவர்கள் 1,93,304 பேர் (82.5%). இதில் ஆண்கள் 1,17,919 பேர். (61%) பெண்கள் 75,358 பேர் (39.9 %). மூன்றாம் பாலினத்தவர் 27 பேர் (.09%).

60 வயதுக்கு மேற்பட்டோர் 29,113 பேர் (12.4%). இதில் ஆண்கள் 17,993 பேர் (61.8%). பெண்கள் 11,120 பேர் (38.2 %).

இவ்வாறு பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x