

கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தப்படும் ரெம்டிசிவர் மற்றும் டாசிலிசிமாப் மருந்துகளை தென்மாவட்டங்களுக்கு வழங்க அரசு முன்வர வேண்டும் என பாமக மாநில பொருளாளர் டாக்டர் திலகபாமா வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து தமிழக அரசுக்கு அவர் அனுப்பியுள்ள கோரிக்கை கடிதத்தில், உலகம் முழுவதிலும் ஒன்றரை கோடிக்கும் அதிகமானோர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 6 லட்சம் பேர் இதற்கு பலியாகி உள்ளனர்.
இந்தியாவில் 12 லட்சத்துக்கும் அதிகமானோர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியா உள்ளிட்ட பல நாடுகள் இதற்கான தடுப்பு மருந்தை தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன.
அனைவரின் எதிர்பார்ப்பும் தடுப்பு மருந்து எப்போது பயன்பாட்டிற்கு வரும் என்பது தான்.
தற்போதைய கரோனா வைரஸ் தடுப்பு மருந்தாக ரெம்டிசிவர் (Remdesivir) மற்றும் டாசிலிசிமாப் (Tocilizumab) ஆகிய மருந்துகள் பயன்பாட்டில் உள்ளன. இந்த இரண்டு மருந்துகளும் சிறந்த வைரஸ் தடுப்பு மருந்தாக செயல்படுகிறது. இந்த வகை மருந்துகள் சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் மட்டுமே எளிதில் கிடைக்கும் வகையில் பயன்பாட்டில் உள்ளன. தென்மாவட்டங்களில் இந்த மருந்துகளை அணுக மிகவும் கடினமாக உள்ளது.
இம்மருந்துகளின் பற்றாக்குறையினால் நோயாளிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர். மருந்துகள் எளிதில் கிடைத்தால் நோயாளிகள் விரைவில் குணமடைந்து வீடு திரும்புவார்கள்.
மேலும், இம்மருந்துகள் ஒரு சில பெரு நிறுவனங்களின் கைவசம் உள்ளன. நடுத்தர மற்றும் சிறு மருத்துவமனைகளுக்கு வரும்போது ரூ.5 ஆயிரத்துக்கும் குறைவான இந்த மருந்துகளின் விலை ரூ.25 ஆயிரத்துக்கு மேல் விலைகள் நிர்ணயிக்கப்படுகிறது.
எனவே, மருந்துகளை எளிதில் அணுகவும் குறிப்பாக தென்மாவட்டங்களுக்கு மருந்துகளை சரியான முறையில் கிடைக்கவும் தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.