Published : 29 Jul 2020 04:12 PM
Last Updated : 29 Jul 2020 04:12 PM

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி: பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை: வானிலை ஆய்வு மையம் தகவல்

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக திருவள்ளூர் உள்ளிட்ட பல மாவட்டங்களில் கன மழை அவ்வப்போது பெய்யக்கூடும் எனவும் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் இருக்கும், மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக வெப்பச்சலனம், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக மிதமான சில நேரம் பலத்த மழை பெய்கிறது. வடகிழக்கு பருவமழை தொடங்கும் முன்னரே வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக மழை பெய்து வருவதால் ஏரிகளின் நீர்மட்டம், நிலத்தடி நீர் உயர வாய்ப்புள்ளது.

தமிழக மழை நிலவரம் குறித்து வானிலை ஆய்வு மையம் செய்திக்குறிப்பு வருமாறு:

“தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக திருவள்ளூர், வேலூர், நீலகிரி, கோவை, தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.

காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், சேலம், தர்மபுரி, மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழையும் ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.
ஜூலை 30 (நாளை) அன்று படங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் ஏனைய மாவட்டங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர்ப் பகுதியில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும் நகரின் ஒரு சில பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும்.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்ச மழை பெய்த மாவட்டங்களின் விவரம்:

செங்கல்பட்டு, தலைஞாயிறு (நாகப்பட்டினம்) திருப்பூண்டி (நாகப்பட்டினம்) தலா 10 செ.மீ., தாமரைப்பாக்கம் (திருவள்ளூர்) மற்றும் காஞ்சிபுரம் தலா 9 செ.மீ., தாம்பரம் வட்டாட்சியர் அலுவலகம் (செங்கல்பட்டு) ஆத்தூர் (சேலம்) நீலகிரி தலா 8 செ.மீ., அம்பத்தூர் (திருவள்ளூர்) வேதாரண்யம் (நாகப்பட்டினம்) திருத்துறைப்பூண்டி (திருவாரூர்) தலா 7 செ.மீ., காரைக்கால், தர்மபுரி, தம்மம்பட்டி (சேலம்), ஜெயங்கொண்டம் (அரியலூர்) தலா 6 செ.மீ. மழையும் பெய்துள்ளது.

மீனவர்களுக்கான எச்சரிக்கை:

ஜூலை 29 தமிழக கடலோரப் பகுதிகளில் சூறாவளி காற்று 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசும்.

ஜூலை 29- குமரி கடல் பகுதிகளில் பலத்த காற்று 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

ஜூலை 29 முதல் ஆகஸ்ட் 2 வரை மன்னார் வளைகுடா பகுதிகளில் பலத்த காற்று 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

ஜூலை 29 முதல் ஆகஸ்ட் 2 வரை கடலோர கர்நாடகா லட்சத்தீவு மற்றும் மாலத்தீவு பகுதிகளில் சூறாவளி காற்று 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

ஜூலை 29 முதல் ஆகஸ்ட் 2 வரை மத்திய தரைக்கடல் பகுதிகளில் பலத்த காற்று 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
மீனவர்கள் மேற்கண்ட பகுதிக்குச் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

கடல் அலை முன் அறிவிப்பு:

தமிழக கடலோரப் பகுதிகள் குளச்சல் முதல் தனுஷ்கோடி வரை ஜூலை 30 இரவு 11 மணி வரை கடல் அலை 3 மீட்டர் முதல் 4.5 மீட்டர் வரை எழும்பக்கூடும்”.

இவ்வாறு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x