Last Updated : 29 Jul, 2020 03:31 PM

 

Published : 29 Jul 2020 03:31 PM
Last Updated : 29 Jul 2020 03:31 PM

விவசாயி மரணத்துக்கு காரணமான வனத்துறையினர் மீது கொலை வழக்குப் பதிவு செய்து கைது செய்ய வேண்டும்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வலியுறுத்தல்

தென்காசி

தென்காசி விவசாயி அணைக்கரை முத்து இறந்தது தொடர்பாக வனத்துறையினர் மீது கொலை வழக்குப் பதிவு செய்து கைது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருநெல்வேலி மாவட்டச் செயலாளர் கே.ஜி.பாஸ்கரன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தென்காசி மாவட்டம், வாகைகுளத்தைச் சேர்ந்த அணைக்கரைமுத்து தனது தோட்டத்தைச் சுற்றிலும் அனுமதியின்றி மின் வேலி அமைத்துள்ளதாகக் கூறி கடந்த 22-ம் தேதி இரவு வனத்துறையினர் விசாரணைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

சிறிது நேரத்தில் வனத்துறையினரிடம் இருந்து வந்த தொலைபேசி அழைப்பில் அணைக்கரை முத்துவுக்கு உடல்நிலை சரியில்லை என்று தகவல் வந்ததையடுத்து அவரது மூத்த மகன் நடராஜன் மற்றும் மருமகன் இருவரும் வனத்துறை அலுவலகத்துக்குச் சென்றுள்ளனர்.

அவர்கள் செல்லும்போது வனத்துறை ஜீப்பில் அணைக்கரைமுத்துவை ஏற்றி எதிரில் வந்துள்ளனர். அப்போது நடராஜன் அணைக்கரைமுத்துவைப் பார்த்தபோது சுய நிறைவின்றி இருந்துள்ளார்.

தென்காசி அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் சோதனை செய்து அணைக்கரைமுத்து உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து நடராஜனிடம் அணைக்கரைமுத்து நெஞ்சு வலி வந்து உயிரிழந்ததாகவும், வனத்துறையினர் தாக்குதலில் உயிரிழக்கவில்லை என்றும் எழுதி வாங்கியுள்ளனர்.

மேலும் இதுகுறித்து தகவலறிந்ததும் உறவினர்கள் மற்றும் ஊர்ப் பொதுமக்கள் நெஞ்சுவலியில் இறக்க வாய்ப்பில்லை என்றும் வனத்துறை தாக்குதலில் தான் அணைக்கரைமுத்து உயிரிழந்துள்ளார் என்றும் கூறி ஆழ்வார்குறிச்சி காவல் நிலையத்தில் திரண்டு, வனத்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

இதையடுத்து ஆழ்வார்குறிச்சி போலீஸார் வழக்குப் பதிவு செய்து குற்றவியல் நீதிபதி விசாரணைக்கு பரிந்துரைத்தனர். அம்பாசமுத்திரம் குற்றவியல் நீதிபதி கார்த்திகேயன் திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் அணைக்கரைமுத்து உறவினர்களிடம் விசாரணை நடத்தியதோடு, அணைக்கரைமுத்து உடலைப் பார்வையிட்டு 18 காயங்கள் இருப்பதாகக் கூறி உறவினர்களிடம் கையெழுத்து வாங்கியுள்ளார்.

மேலும் மாலை 6 மணியானதால் மறுநாள் பிரேதப் பரிசோதனை செய்யலாம் எனக் கூறியதையடுத்து உறவினர்கள் வீட்டுக்கு திரும்பியுள்ளனர். ஆனால் இரவு 8 மணிக்கு மேல் அணைக்கரைமுத்து உடலை உடற்கூறு ஆய்வு செய்துள்ளனர்.

இது குறித்து ஜூலை 24 காலை தகவலறிந்த உறவினர்கள் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து அணைக்கரைமுத்து உடலை வாங்க மறுப்புத் தெரிவித்தனர். தகவலின்றி யாரும் இல்லாத நேரத்தில் உடற்கூறு பரிசோதனை நடைபெற்றதால் அதில் நம்பிக்கை இல்லை என்றும் மறு உடற்கூறு ஆய்வு செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

மேலும் வனத்துறையினர் மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர். ஆனால் போலீஸார் மற்றும் வருவாய்த்துறையினர் தொடர்ந்து கெடுபிடி செய்து வந்தனர்.

இந்நிலையில் சனிக்கிழமை மாலை தமிழக முதல்வர் அணைக்கரை முத்து குடும்பத்திற்கு நிவாரணமாக 10 லட்சம் மற்றும் ஒருவருக்கு அரசு வேலைத் தருவதாக அறிவித்த போது அதை ஏற்க மறுத்து வனத்துறையினர் மீது நடவடிக்கையை தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

அணைக்கரை முத்து உயிரிழப்புக்கு வனத்துறையினர் பொறுப்பேற்க வேண்டும். அவரது உயிரிழப்புக்குக் காரணமான வனச்சரகர் நெல்லை நாயகம் உள்ளிட்ட வனத்துறையினர் மீது கொலை வழக்குப் பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். விவசாயி அணைக்கரை முத்து குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இந்நிலையில், விவசாயி அணைக்கரை முத்து மரணத்துக்குக் காரணமான வனத்துறையினர் மீது கொலை வழக்கு பதிவு செய்து, நடவடிக்கை எடுத்தால் மட்டுமே உடலைப் பெற முடியும் என்று அவரது குடும்பத்தினர் கூறிவிட்டனர். இதனால், அணைக்கரை முத்துவின் உடல் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்படாமல் தொடர்ந்து 7-வது நாளாக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x