

தென்காசியில் வனத்துறையினர் தாக்கியதில் உயிரிழந்த விவசாயின் உடலில் நான்கு இடங்களில் காயங்கள் இருந்ததாக பிரேதப் பரிசோதனை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
தென்காசி வாகைகுளத்தைச் சேர்ந்தவர் விவசாயி அணைக்கரை முத்து. இவர் தோட்டத்தில் மின் வேலி அமைத்துள்ளார். இது தொடர்பாக வனத்துறையினர் அணைக்கரை முத்துவை விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். பின்னர் அவர் உயிரிழந்தார்.
இது தொடர்பாக சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிடக்கோரி அணைக்கரைமுத்து மனைவி பாலம்மாள் உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்துள்ளார்.
இந்த வழக்கு நீதிபதி பொங்கியப்பன் முன்பு விசாரணைக்கு வந்தது. அரசு சார்பில் அணைக்கரை முத்து பிரேதப் பரிசோதனை அறிக்கை மூடி முத்திரையிட்ட கவரில் தாக்கல் செய்யப்பட்டது.
அப்போது அணைக்கரை முத்துவின் உடலை விதியை மீறி இரவில் பிரேதப் பரிசோதனை செய்தது ஏன்? என நீதிபதி கேள்வி எழுப்பினர். அதற்கு சட்டம் ஒழுங்கு பிரச்சினையை தடுக்க இரவில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது என அரசு வழக்கறிஞர் தெரிவித்தார்.
பின்னர் நீதிபதி, அணைக்கரை முத்துவின் உடலில் 4 இடங்களில் காயங்கள் இருந்ததாக பிரேதப் பரிசோதனை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது என நீதிபதி தெரிவித்தார்.
மனுதாரர் வழக்கறிஞர்கள், அணைக்கரை முத்துவின் உடலில் 18 இடங்களில் காயங்கள் இருந்ததாக அவரது குடும்பத்தினரிடம் அம்பை நீதித்துறை நடுவர் தெரிவித்து ஆவணங்களில் கையெழுத்து பெற்றுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து தீர்ப்புக்காக விசாரணையை நாளைக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.