Published : 29 Jul 2020 12:11 PM
Last Updated : 29 Jul 2020 12:11 PM

மருத்துவர் ஆலோசனைப்படி ஆளுநர் பன்வாரிலால் 7 நாட்கள் தனிமை: ராஜ்பவன் தகவல்  

ஆளுநர் மாளிகையில் 38 ஊழியர்களுக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் 3 பேருக்குக் கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. ஆளுநர் பூரண உடல் நலத்துடன் உள்ள நிலையில், மருத்துவர் ஆலோசனையின்படி 7 நாட்கள் அவர் தனிமைப்படுத்திக் கொண்டதாக ஆளுநர் மாளிகை செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை கிண்டி சர்தார் படேல் சாலையில் ஆளுநர் வசிக்கும் ராஜ்பவன் மாளிகை உள்ளது. பல நூறு ஏக்கர் கொண்ட இந்த அலுவலகத்தில் நூற்றுக்கணக்கான ஊழியர்கள் நேரடியாகவும், வெளிப்புறத்திலும் பணியாற்றுகின்றனர். ஆளுநர் மாளிகை ஊழியர்கள் 147 பேருக்குச் சமீபத்தில் கரோனா தொற்றுப் பரிசோதனை நடத்தப்பட்டது.

அதில் 84 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதையடுத்து அவர்கள் பொது சுகாதாரத்துறை மூலம் தனிமைப்படுத்தப்பட்டனர். இவர்கள் ஆளுநர் அலுவலகத்துடன் நேரடித் தொடர்பில் இல்லாதவர்கள், ஆளுநர் அல்லது உயர் அதிகாரிகளுடன் தொடர்பில் இல்லாதவர்கள் என ராஜ்பவன் விளக்கம் அளித்திருந்தது.

இந்நிலையில் ஆளுநர் மாளிகையில் மேலும் 3 பேருக்குக் கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில், ஆளுநரின் மருத்துவர் அளித்த ஆலோசனைப்படி 7 நாள் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தன்னை தனிமைப்படுத்திக்கொண்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக ஆளுநர் மாளிகை இன்று வெளியிட்ட அறிவிப்பு:

“ஆளுநர் மாளிகையில் 38 ஊழியர்களுக்கு கோவிட் -19 பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 35 பேருக்குத் தொற்று இல்லை எனத் தெரியவந்தது. 3 பேருக்கு மட்டுமே கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. உடனடியாக அவர்கள் பொது சுகாதாரத்துறை மூலம் மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அனுப்பப்பட்டனர்.

ஆளுநர் மாளிகை மருத்துவர் நேற்று ஆளுநருக்கு வழக்கமான மருத்துவப் பரிசோதனையை மேற்கொண்டார். இதில் ஆளுநர் பூரண உடல் நலத்துடன் இருப்பது உறுதியானது. ஆளுநரை 7 நாள் தனிமைப்படுத்திக் கொள்ளும்படி மருத்துவர் கேட்டுக்கொண்டார். அதனடிப்படையில் ஆளுநர், தன்னை 7 நாள் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்”.

இவ்வாறு ஆளுநர் மாளிகை தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x