Published : 29 Jul 2020 09:50 AM
Last Updated : 29 Jul 2020 09:50 AM

ஆதரவற்று இறப்பவர்களை அடக்கம் செய்யும் இளைஞர்: கரோனா காலத்திலும் மதுரையில் தொடரும் மனிதநேயம்

மணிகண்டன்

மதுரை

மதுரையில் சாலைகளில், ஆதரவற்ற இல்லங்களில் இறந்துபோகும் ஆதர வற்றவர்களின் உடல்களை ஒரு மகனாக இருந்து மயானத்தில் அடக்கம் செய்து, அனைத்து இறுதிச்சடங்கு களையும் செய்து வருகிறார் இளைஞர் மணிகண்டன்.

மரணமில்லா பெருவாழ்வு யாருக்கும் வாய்ப்பதில்லை. சொந்த, பந்தம் ஆயிரம் இருந்தும் கொள்ளி போட ஆள் இல்லா விட்டால் வாழ்ந்த வாழ்க்கைக்கு அர்த்த மில்லை என்று சொல்லும் சமூகத்தில் ஆதரவற்று இறந்து போகிறவர்களின் நிலை பரிதாபமானது. மதுரையில் அப் படி ஆதரவற்று மரணிப்பவர்களுக்கு மகனாக மனிதநேயம் காட்டுகிறார் வி.பி. மணிகண்டன். இந்த அறச் செயலை ஒரு தவமாக மேற்கொண்டு வருகிறார்.

மதுரை எஸ்.எஸ்.காலனியை சேர்ந்த இவர், தனியார் ஆயுர்வேத மருத்து வமனையில் பணிபுரிகிறார். ஊதியத்தின் ஒரு பகுதியை முதியோர் இல்லங்களில் இறக்கும் ஆதரவற்றவர்களின் இறுதிச் சடங்குக்காகச் செலவிடுகிறார்.

ஆதரவற்ற முதியோர் இல்லங்களில், சாலைகளில் யாராவது முதியவர்கள் இறந்துவிட்டால் அவர்கள் சடலத்தை ஆம்புலன்ஸில் மயானத்துக்கு எடுத்துச் சென்று அவர்கள் குல வழக்கப்படி அடக்கம் செய்கிறார்.

மறுநாள் மயானத்துக்குச் சென்று அவர்கள் அடக்கம் செய்த இடத்தில் பால் ஊற்றுகிறார்.

ஒவ்வொரு மாதமும் அமாவாசை நாட்களில் தான் நல்லடக்கம் செய்த ஆதரவற்ற முதியவர்களுக்கு திதியும் தவறாமல் கொடுத்து விடுகிறார். கரோனா ஊரடங்கு காலத்திலும் இவரது சேவை தொடர்ந்தது.

இது குறித்து அவர் கூறியதாவது:

இறப்பவர்கள், கேட்கும் கடைசி உதவி அவர்கள் நல்லடக்கமாகத்தான் இருக்கும். அந்த ஆத்மா நற்கதி அடைவதற்கு சக மனிதனாக உதவு கிறேன்.

மதுரை கூடல்நகரில் ஒரு ஆதரவற்ற முதியோர் இல்லத்துக்கு வழக்கமாக பழைய துணிகளை கொடுப்பேன். அப்போது, அங்கு ஒரு பெரியவர் காலமாகி விட்டார். ஆனால், அவரது தூரத்து உறவினர்கள் என்று சொல்லி வந்தவர்கள், பணம் வேண்டுமானாலும் தருகிறோம். எங்களால் அடக்கம் செய்ய முடியாது என்று சொல்லிவிட்டனர்.

அதையடுத்து நான், உடனடியாக ஆம்புலன்ஸை வரவழைத்து அந்த முதியவர் உடலை மயானத்துக்கு எடுத்துச் சென்று நல்லடக்கம் செய்தேன். அன்று முதல் ஆதரவற்றவர்கள் இறந்தால் ஒரு மகனாக இந்தச் செயலை செய்து வருகிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

இது மட்டுமில்லாது ஏழை மாணவர்கள் கல்விக்கு உதவி, கரோனா காலத்தில் வறுமையில் வாடிய தொழிலாளர் குடும்பங்களுக்கு அரிசி, மளிகைப் பொருட்கள் வாங்கிக் கொடுப்பது, ஏழை நோயாளிகள் மருத்துவச் சிகிச்சைக்கு உதவி செய்து வருகிறார். மற்றவர்களுடன் சேர்ந்து குழுவாகவும் சமூகத்தின் அடித்தட்டு மக்களுக்கு இவர் உதவி வருவது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x