Published : 29 Jul 2020 08:17 AM
Last Updated : 29 Jul 2020 08:17 AM

15 ஆண்டுக்கும் மேலாகத் தொடரும் கோஷ்டி மோதல்; மதுரை திமுக முன்னாள் மண்டலத் தலைவர் வீடு மீது பெட்ரோல் குண்டு வீச்சு: மனைவி, மகள் உயிர் தப்பினர்

மதுரை காமராசர்புரம் பகுதியில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட விகே. குருசாமியின் வீட்டின் முன் விசாரணை நடத்தும் போலீஸார். படம்: எஸ். கிருஷ்ணமூர்த்தி

மதுரை

மதுரையில் திமுக முன்னாள் மண்டலத் தலைவர் விகே. குருசாமி வீட்டில் பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டன. இதில் அவரது மனைவி, மகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

மதுரை காமராசர்புரம் பகுதியைச் சேர்ந்தவர் விகே. குருசாமி (65). திமுக பிரமுகரான இவர், மாநகராட்சி கிழக்கு மண்டலத் தலைவராக இருந்தார். இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த அதிமுக பிரமுகர் ராஜபாண்டிக்கு அரசியல் ரீதியாக 2006 முதல் முன்விரோதம் உள்ளது, இருதரப்பிலும் அடிக்கடி கோஷ்டி மோதல், கொலைகள் நடந்து வருகின்றன.

இதுவரை குருசாமி தரப்பில் அவரது மருமகன் பாண்டி, ராஜ பாண்டி தரப்பில் அவரது மகன் உட்பட 12-க்கும் மேற்பட்டோர் கொலை செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் குருசாமி மற்றும் அவரது மகன் மணி மீது கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. மேலும், ராஜபாண்டி உடல்நிலை பாதித்து இறந்த நிலையில், அவரது தரப்பால் கொலை மிரட்டலும் உள்ளதால் குருசாமியும், அவரது மகனும் வெளியில் இருந்துகொண்டு வழக்குகளை எதிர்கொள்கின்றனர்.

தற்போது, கீழ்மதுரை ரயில் நிலைய ரோடு பகுதியில் உள்ள குருசாமியின் வீட்டில் அவரது மனைவி தங்க முனியம்மாள், மகள் விஜயலட்சுமி உள்ளிட்டோர் உள்ளனர். நேற்று அதிகாலை குருசாமியின் வீட்டு வாசலில் பலத்த வெடிச் சத்தம் கேட்டது. அவரது மனைவி மற்றும் குடும்பத்தினர் வெளியில் வந்து பார்த்தனர். பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டதில் வீட்டின் கதவு, ஜன்னல் கண்ணாடிகள் சேதமடைந்திருந்தன. தகவல் அறிந்த கீரைத்துறை போலீஸார் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினர். காவல் துணை ஆணையர் சிவபிரசாத் சம்பவ இடத்தை ஆய்வு செய்தார். வெடிகுண்டு தடுப்பு பிரிவினர் தடயங்களை சேகரித்தனர்.

மேலும் குருசாமியின் வீட்டின் அருகே நிறுத்தப்பட்டிருந்த 2 கார்கள், வேன், பைக், ஆட்டோக்கள் சேதப்படுத்தப்பட்டிருந்தன.

அப்பகுதி கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தபோது, பைக்குகளில் வந்த 4 பேர் பெட்ரோல் குண்டுகளை வீசிவிட்டு, வாகனங்களை சேதப்படுத்தி விட்டு தப்பியது தெரியவந்தது.

போலீஸாரின் முதல்கட்ட விசாரணையில், ராஜபாண்டி தரப்பினர் இச்செயலில் ஈடுபட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இரு நாட்களுக்கு முன்பு குருசாமியின் சகோதரியின் கணவர் போஸ் என்பவர் அப்பகுதியில் இறந்த நிலையில், துக்க நிகழ்வில் பங்கேற்க குருசாமி வந்திருக்கலாம் என்ற சந்தேகத்தில் அவரைக் கொலை செய்யும் நோக்கில் இச்சம்பவம் நடந்திருக்கலாம் என போலீஸார் கூறுகின்றனர்.

இச்சம்பவத்தையடுத்து காமராசர்புரம், கீரைத்துறை பகுதியில் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பும் குருசாமியின் வீடு மீது, இதேபோல பெட்ரோல் குண்டு வீசப்பட்டது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x