Published : 29 Jul 2020 07:40 AM
Last Updated : 29 Jul 2020 07:40 AM
நலவாரியங்களில் இதுவரை பதிவு செய்யாத தொழிலாளர்கள் தற்போது பதிவு செய்தாலும் கூடஅடுத்த மாதமே அரசின் நிவாரண உதவிகளைப் பெற முடியும்என தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் உறுதியளித் துள்ளது.
நல வாரியங்களில் பதிவு செய்யாத தொழிலாளர்களுக்கும் கரோனா காலகட்டத்தில் நிவாரணஉதவிகள் வழங்கக் கோரி கட்டுமான தொழிலாளர் சங்கம், ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கம் உள்ளிட்ட பல்வேறு சங்கங்களின் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டிருந்தன.
இந்த வழக்குகள் நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஆர்.ஹேமலதா ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர்கள் தரப்பில், ‘‘கரோனா ஊரடங்கு காலகட்டத்தில் நல வாரியத்தில் பதிவு செய்யாத தொழிலாளர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே நலவாரியத்தில் பதிவை புதுப்பிக்க தவறியவர்கள், இதுவரை பதிவு செய்யாதவர்களுக்கும் நிவாரண உதவியாக ரூ.5 ஆயிரம் வழங்க அரசுக்கு உத்தரவிட வேண்டும் என கோரப்பட்டது. அப்போது அரசு தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண், அரசு ப்ளீடர் வி.ஜெயப்பிரகாஷ் நாராயண் ஆகியோர் ஆஜராகி வாதிட்டபோது,
‘‘நலவாரியத்தில் பதிவு செய்த கட்டுமான தொழிலாளர்களுக்கு ஏப்ரல், மே மாதங்களில் தலா ரூ.1,000வீதம் மொத்தம் ரூ. 2 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது. மேலும் சென்னை,காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த கட்டுமான தொழிலாளர்களுக்கு ஜூன் மாதமும் ரூ.1,000 வழங்கப்பட்டுள்ளது.
இதுதவிர்த்து, தமிழக அரசுதரப்பில் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1,000 வழங்கப்பட்டுள்ளது. அதுவும் சென்னை உள்ளிட்ட4 மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் எனில் மீண்டும் ரூ.1,000 வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் மொத்தம்12.13 லட்சம் உறுப்பினர்கள் கொண்ட கட்டுமான தொழிலாளர்கள் நல வாரியத்தில் உள்ள ரூ. 3ஆயிரத்து 200 கோடி நிதியிலிருந்து இதுவரை ரூ. 343 கோடி கரோனா நிவாரண நிதியாக வழங்கப்பட்டுள்ளது. பதிவு செய்யாத தொழிலாளர்களுக்கு நிதியுதவி வழங்குவதாக இருந்தால் அந்த நிதி தவறாக பயன்படுத்த வாய்ப்பு ஏற்படும். கட்டுமானத் துறையில் சுமார் 50 லட்சம் பேர் மற்றும் இதர துறைகளில் சுமார் ஒரு கோடி பேர் என மொத்தம் ஒன்றரை கோடி பேர் பதிவு செய்யாத தொழிலாளர்கள் கணக்கில் வருவர் என கணக்கிடப்பட்டுள்ளது.
இதுவரை நலவாரியங்களில் பதிவு செய்யாத தொழிலாளர்கள் தற்போது ஆன்லைன் மூலமாக பதிவு செய்து கொண்டாலும் கூடஅடுத்த மாதத்தில் இருந்து அரசின் நிவாரண உதவிகளைப் பெற முடியும்’’ என்றனர்.
இதையடுத்து நீதிபதிகள் இந்தவழக்கை ஜூலை 30-ம் தேதிக்கு (நாளை) தள்ளிவைத்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT