Published : 28 Jul 2020 06:46 PM
Last Updated : 28 Jul 2020 06:46 PM

சென்னை ஆட்சியர் சீதாலட்சுமிக்கு கரோனா தொற்று: கிண்டி மருத்துவமனையில் அனுமதி

சென்னை மாவட்ட ஆட்சியர் சீதாலட்சுமிக்குக் கரோனா தொற்று ஏற்பட்ட நிலையில், கிண்டி கிங்ஸ் இன்ஸ்டிடியூட் அரசு கரோனா மருத்துவ சிகிச்சை மையத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கரோனா தொற்றுப் பரவலைத் தடுக்கும் பணியில் பேரிடர் மேலாண்மையை அமல்படுத்தும் இடத்தில் மாவட்ட ஆட்சியர்கள் உள்ளனர். முன் களப்பணியாளர்களாக மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்கள், தூய்மைப் பணியாளர்கள், காவல்துறையினர், வருவாய் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் போராடி வருகின்றனர். அரசியல் கட்சியினரும் முன் களப்பணியில் உள்ளனர்.

இதனால் அதிகப்படியான பாதிப்பு இவர்களுக்குத்தான் முதலில் ஏற்படுகிறது. சென்னை உள்ளிட்ட தமிழகம் முழுவதும் திமுக சட்டப்பேரவை உறுப்பினர் ஜெ.அன்பழகன், மருத்துவர் சாம்சன் உட்பட காவல்துறையினர், மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரத் துறையினர், வருவாய்த்துறை அதிகாரிகள் எனப் பலர் கரோனா பாதிப்பால் தங்கள் இன்னுயிரை இழந்துள்ளனர்.

பல ஐபிஎஸ், ஐஏஎஸ் அதிகாரிகள், மருத்துவர்கள், அமைச்சர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உடல்நலம் தேறியுள்ளனர். சமீபத்தில் கோவை ஆட்சியர் ராசாமணி, காஞ்சிபுரம் ஆட்சியர் பொன்னையா ஆகியோர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இந்நிலையில் சென்னை மாவட்ட ஆட்சியரும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்.

சென்னை மாவட்ட ஆட்சியர் சீதாலட்சுமிக்குக் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கரோனா தொற்று உறுதியானதையடுத்து சென்னை கிண்டி கிங்ஸ் மருத்துவமனையில் திறக்கப்பட்ட அரசு கரோனா பன்னோக்கு மையத்தில் நேற்று மாவட்ட ஆட்சியர் சீதாலட்சுமி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x