

விருதுநகர் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 41 சிறுவர்கள், ஒரு லேப் டெக்னீஷியன், 13 கர்ப்பிணிகள் உள்பட இதுவரை இல்லாத அளவில் 610 பேர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டனர்.
விருதுநகர் மாவட்டத்தில் கரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இன்று ஒரே நாளில் மட்டும் 41 குழந்தைகளுக்கு கரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது.
அதோடு, விருதுநகர் மாவட்டத்தில் இதுவரை இல்லாத அளவில் அதிகபட்சமாக இன்று ஒரே நாளில் 610 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இவர்களில், ஒரு லேப் டெக்னீஷியனும், 13 கர்ப்பிணிகளும் அடங்குவர்.
இதன்மூலம் விருதுநகர் மாவட்டத்தில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 7,545 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் விருதுநகர் மாவட்டத்தில் இதுவரை 3,918 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பி உள்ளனர். 3,564 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். உயிரிழந்தோரின் எண்ணிக்கையும் 63 ஆக உயர்ந்துள்ளது.
முன்னாள் நகர்மன்றத் தலைவர் உயிரிழப்பு:
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சைபெற்றுவந்த முன்னாள் நகர்மன்ற பெண் தலைவர் தனலட்சுமி நேற்று இரவு உயிரிழந்தார்.
ராஜபாளையம் நகராட்சியில் நகர்மன்றத் தலைவராக கடந்த 2011 முதல் 2016 வரை பதவி வகித்தவர் தனலட்சுமி (அதிமுக). இவரது கணவர் செல்வசுப்பிரமணிய ராஜா. முன்னாள் விருதுநகர் மாவட்ட ஜெயலலிதா பேரவைச் செயலாளர் என்பது குறிப்பிடத்தக்கது.
கரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட முன்னாள் நகர்மன்றத் தலைவர் தனலட்சுமி கடந்த 3 நாள்களாக ராஜபாளையத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்றுவந்தார்.
இந்நிலையில், நேற்று இரவு இவருக்கு திடீர் மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்தார். அதையடுத்து, அவரது உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படாமல் நேற்று இரவே அரசு வழிகாட்டுதல்கள் படி தகனம் செய்யப்பட்டது.
ராஜபாளையத்தில் பிரபல மருத்துவர் சாந்திலால் மற்றும் முன்னாள் நகர்மன்றத் தலைவர் தனலட்சுமி ஆகியோர் கரோனாவால் பாதிக்கப்பட்டு ஒரே நாளில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.