Published : 28 Jul 2020 03:48 PM
Last Updated : 28 Jul 2020 03:48 PM

கரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.10,000 நிவாரணம் கோரி வழக்கு: உயர் நீதிமன்றத்தில் விசாரணை

கரோனா தொற்று ஏற்பட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.10,000 நிவாரணம் கோரிய வழக்கில் மலைவாழ் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டிய நீதிபதிகள் அமர்வு மலைவாழ் மக்கள் வாழ்விடங்களை ஆய்வு செய்து மானியம் அளிக்கவும் அதுகுறித்து அரசு அறிக்கை அளிக்கவும் உத்தரவிட்டனர்.

கரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு, தலா 10,000 ரூபாய் நிவாரணம் வழங்க உத்தரவிடவேண்டும் என்று வழக்கறிஞர் எம்.எல்.ரவி, சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றைத் தொடர்ந்துள்ளார்.
அவரது வழக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஆர். ஹேமலதா அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது .

அப்போது நீதிபதிகள், ஊரடங்கால் மலைவாழ் பழங்குடியின மக்கள் கடுமையாக பாதிக்கப் பட்டுள்ளதாகவும், பள்ளிகள் மூடப்பட்டுள்ளதால், பழங்குடியின குழந்தைகள் வேறு வேலைக்கு செல்வதாக ஆங்கில நாளிதழ் ஒன்றில் வெளியான செய்தியை சுட்டிக் காட்டினர்.

அப்போது குறுக்கிட்ட அரசு தரப்பு வழக்கறிஞர், அரசு தொடர்ந்து நான்கு மாதம் இலவச அரிசி மற்றும் ரூ.1,000 நிவாரணம் வழங்கி வருவதாக தெரிவித்தார். வழக்கை விசாரித்த நீதிபதிகள் பழங்குடியினர் உள்ள பகுதிகளுக்கு அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்ய வேண்டும், ஆய்வு செய்து அவர்களுக்கு உரிய நிவாரணங்கள் வழங்கப்பட வேண்டும் என உத்தரவிட்டனர்.

நிவாரணம் வழங்கப்பட்டது தொடர்பான அறிக்கை அளிக்குமாறு உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை மூன்று வாரத்திற்கு ஒத்தி வைத்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x