Published : 28 Jul 2020 01:58 PM
Last Updated : 28 Jul 2020 01:58 PM

அதிகரிக்கும் கரோனா; தாலுக்கா அளவில் மருத்துவக் கட்டமைப்பு தேவை: கோவை எம்.பி. வலியுறுத்தல்

கோவை

கோவை மாவட்டத்தில் கரோன தொற்று பாதிப்பு ஏற்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிற நிலையில் தொற்றாளர்களின் பாதுகாப்பு மற்றும் தொற்றுப் பரவலைத் தடுத்திடத் தாலுக்கா அளவில் மருத்துவப் பரிசோதனை மற்றும் சிகிச்சை ஆகியவற்றிற்காக மருத்துவக் கட்டமைப்புகளை உருவாக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கட்சியைச் சேர்ந்த கோவை மக்களவை உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்துக் கோவை மாவட்ட ஆட்சியருக்கு அவர் கடிதம் எழுதியுள்ளார்.

அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது,

''கோவையில் கரோனா தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. கோவை மாவட்டத்தில் கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை ஜூலை இறுதியில் ஆயிரத்தைக் கடக்கும் என சுகாதாரத்துறை மதிப்பிட்டிருந்ததாகச் செய்திகள் வெளியாகி இருந்தன. ஆனால் இதற்கு நேர் மாறாக நான்காயிரத்தை நெருங்கியுள்ளது. கடந்த பத்து நாட்களுக்குள்ளாக இரண்டாயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதில் இருந்து இத்தொற்று தீவிரமடைந்துள்ளது கண்கூடாகத் தெரிகிறது. இத்தொற்றால் பாதிக்கப்பட்ட வசதி படைத்த வெகுசிலரே, தனியார் மருத்துவமனைக்குச் செல்கின்றனர். தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவதற்கான கட்டணம் பன்மடங்கு என்பது மிக முக்கியமான காரணமாகும். ஆகவே பெரும்பாலானோர் அரசின் சிகிச்சையை நம்பியே உள்ளனர்.

இந்நிலையில் இஎஸ்ஐ மருத்துவமனை, கொடிசியாவில் மட்டும் தற்போது கரோனா பாதித்தவர்களுக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த ஏற்பாடு என்பது மட்டும் போதுமானதல்ல. மேலும் எவ்விதத் தொடர்புமற்ற நோய்த்தொற்றுக்கான அறிகுறி உள்ளவர்கள் பரிசோதனை செய்ய கோவை இஎஸ்ஐ மருத்துவமனைக்கே வரவேண்டிய தேவை உள்ளது. இதன் காரணமாக இஎஸ்ஐ மருத்துவமனை முன்பு ஒவ்வொரு நாளும் நூற்றுக்கும் அதிகமானோர் பரிசோதனைக்காக வருகின்றனர்.

இவ்வாறு இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனத்தில் வருகின்றவர்கள் மருத்துவமனையினுள் அனுமதிக்கப்படாத காரணத்தினால் சாலையிலேயே வாகனத்தை நிறுத்தி விட்டுச் செல்கின்றனர். இதன் காரணமாக நோய்த்தொற்று பரவலாகும் ஆபத்து உள்ளது. இந்த இஎஸ்ஐ மருத்துவமனையைச் சுற்றியுள்ள குடியிருப்புப் பகுதிகளில் அன்றாடம் கிருமிநாசினி தெளிப்பது போன்ற நடவடிக்கைகளில் மெத்தனம் இருப்பதாகத் தெரிகிறது. சுகாதாரத்துறை மற்றும் மாநகராட்சி போதிய கவனம் செலுத்துவதில்லை என்கிற குற்றச்சாட்டும் மக்களிடம் இருந்து தொடர்ந்து எழுகிறது.

இதனை உடனடியாகச் சரிசெய்ய வேண்டும். மேலும் கோவை இஎஸ்ஐ மருத்துவமனை மற்றும் கொடிசியாவில் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் தேவைக்கேற்ப இல்லாததால் பணியில் உள்ளவர்களுக்கு ஓய்வில்லாத நிலை ஏற்படுவதாகத் தகவல்கள் வருகின்றன. மேலும், சுகாதார ஊழியர்களின் பற்றாக்குறையால் சுகாதாரப் பணிகளில் தொய்வு ஏற்படுகிறது. மருத்துவப் பரிசோதனையில் நோய்த்தொற்று கண்டறிந்தவர்களைக் குறிப்பிட்ட நேரத்தில் அழைத்து வருவதற்கான ஆம்புலன்ஸ் வசதி போதுமானதாக இல்லை என்பதால் நோய்த்தொற்று ஏற்பட்டவர்கள் பலமணிநேரம் காத்திருப்பது சம்பந்தப்பட்டவர்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தும். இதேபோல தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் பொருளாதார வசதியற்ற மக்களுக்கு உணவு உள்ளிட்ட தேவைகளைப் பூர்த்தி செய்ய வேண்டியது உடனடி அவசியமாக உள்ளது.

இதனால் கரோனா மருத்துவப் பரிசோதனைகள் மற்றும் நோய்த்தொற்றாளர்களுக்கான சிகிச்சை வசதிகளை அளிக்க, தாலுக்கா அளவில் மருத்துவக் கட்டமைப்பை உருவாக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன். மேலும், மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் சுகாதார ஊழியர்களின் பற்றாக்குறை குறித்து தமிழக முதல்வரின் கவனத்திற்குக் கொண்டு சென்று உடனடியாகப் புதிய நியமனத்தைச் செய்வதற்கான உத்தரவைப் பெற வேண்டுகிறேன்.

இக்காலத்தில் சுகாதாரப் பணி என்பது சவாலானது என்பதையறிந்தும் உணர்வுபூர்வமான பணிகளை மேற்கொள்ளும் நிரந்தரமல்லாத தூய்மைப் பணியாளர்கள் அனைவரையும் நிரந்தரமாக்குவதற்கான பரிந்துரையைத் தமிழக அரசிடம் பெற வேண்டும்.

உலகையே அச்சுறுத்தும் கரோனா தொற்று, சுகாதாரத் துறையில் வலுவாக உள்ள நமக்குச் சவாலை ஏற்படுத்தியுள்ளதாகவே கருதுகிறேன். இத்தகைய சவால்களை ஒன்றிணைந்து எதிர்கொள்ள உடனடியாக இக்கோரிக்கைகளின் மீது உடனடி நடவடிக்கை மேற்கொண்டு நமது மக்களைப் பாதுகாக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்''.

இவ்வாறு பி.ஆர்.நடராஜன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x