Last Updated : 28 Jul, 2020 01:00 PM

 

Published : 28 Jul 2020 01:00 PM
Last Updated : 28 Jul 2020 01:00 PM

சாத்தான்குளம் போலீஸ் தாக்கியதில் இளைஞர் பலியானதாகப் புகார்: மகேந்திரனின் உறவினர்கள், நண்பர்களிடம் சிபிசிஐடி போலீஸார் விசாரணை

தூத்துக்குடி

காவலர்கள் தாக்கியதில் உடல்நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்ததாகக் கூறப்படும் மகேந்திரனின் உறவினர்கள் மற்றும் நண்பர்களிடம் சிபிசிஐடி போலீஸார் விசாரணை.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட ஸ்ரீவெங்கடேஸ்வரபுரத்தை சேர்ந்தவர் வடிவு அம்மாள். இவரது கணவர் சுந்தரம் கடந்த 2009-ம் ஆண்டு உடல் நலக்குறைவால் உயிரிழந்துவிட்டார்.

இந்த நிலையில் தனது 2 மகன்கள் மற்றும் ஒரு மகள் மூவரோடு வாழ்ந்து வந்தார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தனது மகளுக்கும், மூத்த மகன் துரைக்கும் திருமணம் முடித்து வைத்தார்.

மகள் தூத்துக்குடியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். மூத்த மகன் துரை தாய் வீட்டுக்கு அருகிலேயே மனைவி, 3 பெண் குழந்தைகளுடன் வசித்து வருகிறார்.

இந்த நிலையில் கடந்த மே மாதம் 18-ம் தேதி வெங்கடேஸ்வராபுரம் 6-வது வார்டு உறுப்பினர் ஜெயக்குமார் மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் வடிவு அம்மாவின் மூத்த மகன் துரையும் சம்பந்தப்பட்டிருக்கிறார் எனக் கூறி அவரை போலீஸார் அவரைத் தேடியுள்ளனர். அவர் கிடைக்காததால் அவர் தம்பி மகேந்திரனைத் (வயது 28) தேடினர்.

கட்டிட வேலைக்காக நெல்லை மாவட்டம் பாப்பாங்குளத்தில் தனது பாட்டி வீட்டில் தங்கியிருந்த மகேந்திரனை 23.05.2020-ம் தேதி நள்ளிரவு
சாத்தான்குளம் காவல் உதவி ஆய்வாளராக பணியாற்றிய ரகு கணேஷ் தலைமையிலான போலீஸார் அடித்து இழுத்து வண்டியில் ஏற்றிவந்துள்ளனர்.

பின்னர் 24.05.2020-ம் தேதி மதியம் உடல் முழுவதும் காயங்களுடன் மகேந்திரனை வீட்டிற்கு மிரட்டி அனுப்பியதாக அவரது ஊர்க்காரர்களால் கூறப்பட்டது. வீட்டிற்கு வந்த மகேந்திரன் உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார்.

இதனைத் தொடர்ந்து ஜூன் மாதம் 11ம் தேதி தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அவரது சகோதரி உதவியுடன் மகேந்திரன் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில் ஜூன்ன்13-ம் தேதி சிகிச்சை பலனின்றி தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் மகேந்திரன் உயிரிந்தார். மகேந்திரன் உயிர் இழந்த பிறகும் காவல்துறையின் அச்சுறுத்தல்களை சந்தித்ததால் பிரேதப் பரிசோதனை செய்யப்படாமல் அவரது உடல் சமுதாய முறைப்படி எரியூட்டப்பட்டது.

இந்தச் சூழ்நிலையில் சாத்தான்குளம் வியாபாரிகள் இறந்த சம்பவத்தை நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணை நடத்தியதைத் தொடர்ந்து சிபிசிஐடி, சிபிஐ விசாரணைகளும் அடுத்தடுத்து உறுதி செய்யப்பட்டன.

இதனையறிந்த வடிவு அம்மாள் சாத்தான்குளம் வியாபாரிகள் போலீஸாரால் அடித்து துன்புறுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டது போலவே தன்னுடைய மகனும் துன்புறுத்தப்பட்டு உயிரிழந்துள்ளார்.

எனவே எனது மகனுடைய இறப்பு சம்பவத்தையும் நீதிமன்றம் விசாரித்து நீதி வழங்க வேண்டும் என கோரி தூத்துக்குடி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு வழியாக மனுத்தாக்கல் செய்திருந்தார். அதன் அடிப்படையில் மாவட்ட நீதிமன்றம் இலவச சட்ட ஆலோசகர் ஒருவரை வடிவு அம்மாளுக்கு நியமித்து உத்தரவிட்டிருந்தது.

இந்தச் சூழலில் வடிவு அம்மாளுக்கு ஆதரவாக பிரபல வழக்கறிஞர் ராமசாமி ஆஜராவதற்கு முன்வந்துள்ளார்.

இந்நிலையில் மதுரை உயர் நீதிமன்ற கிளை மகேந்திரன் உயிரிழந்தது தொடர்பாக சிபிசிஐடி போலீஸார் விசாரணை செய்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தது

அதனடிப்படையில் சிபிசிஐடி டி.எஸ்.பி அனில்குமார் தலைமையிலான போலீஸார் மமேந்திரனின் சகோதரி மற்றும் தாயார் வடிவு ஆகியோரிடம் விசாரணை மேற்கொண்டனர்

இந்நிலையில் மகேந்திரனின் மைத்துனர்கள் ராஜா, கண்ணன் மற்றும் மகேந்திரனின் நண்பர்கள் மணி, மாடசாமி ஆகியோர் தூத்துக்குடி சிபிசிஐடி அலுவலகத்தில் டி.எஸ்.பி அனில்குமார் முன்பு விசாரணைக்காக இன்று காலை ஆஜராகியுள்ளனர்

மேலும் நாளை சிபிசிஐடி போலீஸார் நெல்லை மாவட்டம் பாப்பாங்குளத்தில் விசாரணை மேற்கொள்ள உள்ளனர். மகேந்திரனை சாத்தான்குளம் காவல்துறையினர் பாப்பாங்குளத்தில் வைத்து தான் கைது செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x