Last Updated : 28 Jul, 2020 11:52 AM

 

Published : 28 Jul 2020 11:52 AM
Last Updated : 28 Jul 2020 11:52 AM

இரவு நேரத்தில் உடற்கூறாய்வு செய்தது ஏன்?- தென்காசி விவசாயி வழக்கில் உயர் நீதிமன்ற மதுரைக் கிளை கேள்வி

இடது: விவசாயி அணைக்கரை முத்து

தமிழகத்தில் மாலை 4 மணிக்கு மேல் உடற்கூறாய்வு செய்யக்கூடாது என ஏற்கெனவே உத்தரவு பிறப்பிக்கபப்ட்டுள்ள நிலையில், நீதிமன்ற உத்தரவை மீறும் வகையில் தென்காசி விவசாயியின் உடலை அவசர அவசரமாக இரவு நேரத்தில் உடற்கூறாய்வு செய்யப்பட்டது என உயர் நீதிமன்ற மதுரைக்கிளை கேள்வி எழுப்பியுள்ளது.

மேலும், தென்காசி மாவட்டம் வாகைக்குளத்தில் உயிரிழந்த விவசாயின் உடற்கூறாய்வு அறிக்கை மற்றும் வீடியோ பதிவுடன் நிலை அறிக்கையை சீலிட்ட கவரில் தாக்கல் செய்ய நெல்லை அரசு மருத்துவமனை முதல்வர், தென்காசி காவல் கண்காணிப்பாளருக்கு உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

தென்காசி மாவட்டம் வாகைகுளத்தைச் சேர்ந்த பாலம்மாள் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுவினைத் தாக்கல் செய்திருந்தார்.

அதில்," எனது கணவர் அணைக்கரை முத்து வாகைகுளம் பகுதியில் விவசாயம் செய்துவந்தார். இந்த நிலையில் ஜூலை 22-ம் தேதி இரவு 11 மணி அளவில் வனத்துறை நெல்லை நாயகம் தலைமையில் முருகசாமி, சக்தி முருகன், பசுங்கிளி உள்ளிட்ட வனத்துறை அலுவலர்கள் வீட்டிற்கு வந்து எனது கணவரை விசாரிக்க வேண்டும் எனக் கூறி சிவசைலம் பகுதியில் உள்ள பங்களா குடியிருப்பு பகுதிக்கு அழைத்துச் சென்றனர்.

இதை அறிந்து எனது மகன் நடராஜன் சிவசைலம் பகுதியில் உள்ள வனத்துறை அலுவலகத்துக்கு சென்றபோது எதிர்புறத்தில் வன அலுவலர்கள் வாகனம் வந்துவிடவே உடனடியாக வாகனத்தில் ஏறுமாறு கூறியுள்ளனர்.

தொடர்ந்து, தென்காசி அரசு மருத்துவமனையில் கணவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். எனது கணவர் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் இருந்த நிலையில் திடீரென உயிர் இழப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பு இல்லை. இதன் அடிப்படையில் காவல் நிலையத்தில் ஜூலை 23ல்மகன் நடராஜன் புகார் அளித்தார்.

நீதித்துறை நடுவர் விசாரணையில் 18 இடங்களில் வெளிப்புற காயங்கள் இருந்தது தெரியவந்துள்ளது. அதன் அடிப்படையில் குடும்பத்தாரிடமும் நீதித்துறை நடுவர் கையெழுத்து பெற்று கொண்டார்.

இந்நிலையில் 23-ம் தேதி இரவே அவசரமாக உடற்கூறாய்வு செய்யப்பட்டுள்ளது. தடய அறிவியல் துறையின் தலைவர் டாக்டர் செல்வமுருகன் இருக்கும் நிலையில், அவரது தலைமையில் இல்லாமல் இந்த உடற்கூறு ஆய்வு நடைபெற்று உள்ளது.

வனத்துறையினர் தாக்கியதன் காரணமாகவே கணவர் உயிரிழந்ததாக சந்தேகம் உள்ளது. ஆகவே இவற்றைக் கருத்தில் கொண்டு உயிரிழந்த அணைக்கரை முத்துவின் உடலை தடய அறிவியல் துறை மருத்துவர் குழு பிரேத பரிசோதனை செய்யவும், தொடர்புடைய வனத்துறை அலுவலர்கள் மீது கொலை வழக்குப் பதிவு செய்யவும், வழக்கு விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றவும், உரிய இழப்பீடு வழங்கவும் உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி பொங்கியப்பன் முன்பாக விசாரணைக்கு வந்தது. அணைக்கரை முத்து 23 ஆம் தேதி அதிகாலை 1.30 மணியளவில் உயிரிழந்த நிலையில், வனத்துறை சார்பில் அவரது உயிரிழப்பு தொடர்பாக எவ்வித புகாரும் அளிக்கப்படவில்லை. குடும்பத்தினருக்கும் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டது தொடர்பான உரிய விபரம் தெரிவிக்கப்படவில்லை.

உடற்கூறாய்வு 24 ஆம் தேதி காலையே நடைபெறும் என நீதித்துறை நடுவர் தெரிவித்த நிலையில், இரவே உடற்கூறாய்வு செய்ய வேண்டிய தேவை இல்லாத நிலையில், 23ஆம் தேதியே இரவோடு இரவாக உடற்கூறாய்வு செய்யப்பட்டுள்ளது. இவை அனைத்தும், அவரது மரணம் தொடர்பான சந்தேகங்களை வலுப்படுத்துவதாகவே அமைகிறது" என வாதிட்டார்

அரசுத்தரப்பில்," அணைக்கரை முத்துவின் விவசாய நிலத்தைச் சுற்றி சட்டவிரோதமாக மின்வேலி அமைக்கப்பட்டிருந்ததந் காரணமாக வே விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்." எனத் தெரிவிக்கப்பட்டது.

அதற்கு நீதிபதி இப்போது பிரச்சனை அதுவல்ல. உடற்கூறாய்வு எப்போது நடைபெற்றது? எனக் கேள்வி எழுப்பினார். அதற்கு அரசுத்தரப்பில் 23-ம் தேதி இரவு 9 மணிக்கு உடற்கூறாய்வு முடிந்தது" என தெரிவித்தார்.

அதற்கு நீதிபதி, தமிழகத்தில் மாலை 4 மணிக்கு மேல் உடற்கூறாய்வு செய்யக்கூடாது என ஏற்கெனவே உத்தரவு பிறப்பிக்கபப்ட்டுள்ள நிலையில், நீதிமன்ற உத்தரவை மீறும் வகையில் எவ்வாறு உடற்கூறாய்வு செய்யப்பட்டது? என கேள்வி எழுப்பினார்.

அதற்கு அரசுத்தரப்பில் தென்காசி மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் தரப்பில், அணைக்கரை முத்துவின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபடுவதால், சட்ட ஒழுங்கு பிரச்சனையை தவிர்க்கும் வகையில் விரைவாக பிரேதப் பரிசோதனை செய்யுமாறு நெல்லை மருத்துவக்கல்லூரி முதல்வரிடம் கோரப்பட்டது. அதன் அடிப்படையிலேயே உடற்கூறாய்வு செய்யப்பட்டது" எனத் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து நீதிபதி, உடற்கூறாய்வு அறிக்கை மற்றும் வீடியோ பதிவுடன் நிலை அறிக்கையை, சீலிட்ட கவரில் தாக்கல் செய்ய நெல்லை அரசு மருத்துவமனை முதல்வர், தென்காசி காவல் கண்காணிப்பாளருக்கு உத்தரவிட்டு வழக்கு விசாரணையை நாளைக்கு ஒத்திவைத்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x