Published : 28 Jul 2020 08:06 AM
Last Updated : 28 Jul 2020 08:06 AM

கரோனாவில் இருந்து குணமடைந்து முன்னுதாரணமான 103 வயது முதியவர்

கரோனா பாதிப்பால் திண்டுக்கல்அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 103 வயது முதியவர் குணமடைந்து வீடு திரும்பினார்.

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் கோவில்பட்டியைச் சேர்ந்தவர் சண்முகம். விவசாயியான இவருக்கு 103 வயதாகிறது. மூச்சுத் திணறல் காரணமாக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக கடந்த வாரம் சேர்க்கப்பட்டார். இவருக்குப் பரிசோதனை செய்ததில் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. உறவினர் ஒருவர் மூலம் முதியவருக்கு கரோனா தொற்று பரவியது தெரியவந்தது.

இவருக்கு முதற்கட்டமாக மருத்துவர்கள் ஆக்சிஜன் கொடுத்து மூச்சுத் திணறலை சீராக்கினர். அதைத் தொடர்ந்து மருத்துவர்கள் கரோனா சிகிச்சையைத் தொடர்ந்தனர். இந்நிலையில் கரோனா தொற்றில் இருந்து சண்முகம் நேற்று குணமடைந்தார். இவருக்கு திண்டுக்கல் மாவட்ட நலப் பணிகள் இணை இயக்குநர் சிவக்குமார் சால்வை அணிவித்து அனுப்பி வைத்தார். அப்போது டாக்டர்கள், செவிலியர்கள் உடன் இருந்தனர்.

இதுகுறித்து திண்டுக்கல் மாவட்ட நலப் பணிகள் இணை இயக்குநர் மருத்துவர் சிவக்குமார் `இந்து தமிழ்' செய்தியாளரிடம் கூறியதாவது: 103 வயது முதியவர் குணமடைந்திருப்பது மருத்துவ சிகிச்சையுடன், அவரது உறுதியையும் காட்டுகிறது. அவர் ஒரு இட்லி கூட சாப்பிடுவதற்கு சிரமப்பட்டார். அனைவருக்கும் அளிக்கும் சிறப்பான சிகிச்சையை அவருக்கும் அளித்தோம்.

தீவிர கண்காணிப்பு, சிகிச்சை ஆகியவற்றால் முதியவர் குணமடைந்தது அனைவரையும் மகிழ்ச்சிக்குள்ளாக்கியது. அரசு மருத்துவமனையில் சிறந்த சிகிச்சை அளிக்கப்படுகிறது என்பதற்கு முதியவர் குணமடைந்து திரும்பியதே உதாரணம். கரோனாவை அனைவரும் வெல்லலாம் என இந்த முதியவர் அனைவருக்கும் ஊக்கமளித்துள்ளார் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x