

நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற தொழிலாளி மரணமடைந்த நிலையில் போலீஸார் தாக்கியதாலேயே அவர் இறந்ததாகக் கூறி உறவினர்கள் மறியலில் ஈடுபட்டனர்.
திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் விபத்தில் சிக்கியதாக அனுமதிக்கப்பட்ட தொழிலாளி சண்முகம் (40) உயிரிழந்தார். ஆனால் போலீஸார் தாக்கியதில் அவர் உயிரிழந்ததாக கூறி உறவினர்கள் மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
பாளையங்கோட்டை அருகே உள்ள நடுவக்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்தவர் சண்முகம்(40). தூத்துக்குடியில் ரயில்வேயில் ஒப்பந்த சுமைதூக்கும் தொழிலாளியாக பணியாற்றி வந்தார்.
கடந்த 25-ம் தேதி இரவு 8 மணியளவில் திருநெல்வேலி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் போலீஸாரால் அவர் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இருசக்கர வாகன விபத்தில் அவர் சிக்கியதாக போலீஸார் தெரிவித்திருந்தனர். பாளையங்கோட்டை தாலுகா காவல் நிலையத்தில் விபத்து வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலை 10 மணியளவில் சண்முகம் உயிரிழந்தார்.
இதையடுத்து அவரது உறவினர்கள் மருத்துவமனை வளாகத்தில் திரண்டனர். போலீஸார் விசாரணை என்ற பெயரில் அழைத்துச் சென்று தாக்கியதில்தான் சண்முகம் உயிரிழந்ததாக அவர்கள் குற்றஞ்சாட்டினர்.
விபத்து வழக்கை கொலை வழக்காக மாற்ற வேண்டும் என்று வலியுறுத்தி அரசு மருத்துவமனை உடற்கூறு ஆய்வகத்தின் நுழைவு வாயில்முன் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.
இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதையடுத்து அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை போலீஸார் அவர்களை கைது செய்தனர். மொத்தம் 32 பேர் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர்.