நில அளவைக் கட்டணம் 70 மடங்கு வரை உயர்வு; கரோனா காலத்திலும் மக்களுக்கு அதிர்ச்சி கொடுப்பதா?- தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கண்டனம்

நில அளவைக் கட்டணம் 70 மடங்கு வரை உயர்வு; கரோனா காலத்திலும் மக்களுக்கு அதிர்ச்சி கொடுப்பதா?- தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கண்டனம்
Updated on
1 min read

கரோனா நோய்த்தொற்று காரணமாக விவசாயிகள், பொதுமக்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகியுள்ள நிலையில் மேலும் தொல்லை தரும் விதமாக நில அளவைக் கட்டணத்தைப் பல மடங்கு அரசு உயர்த்தியுள்ளதைத் திரும்பப் பெறவேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநிலச் செயலாளர் சண்முகம் இன்று விடுத்துள்ள அறிக்கை:

“கரானா நோய்த்தொற்று மற்றும் பொதுமுடக்கம் காரணமாக மக்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகியுள்ளனர். வாழ்வாதாரம் இழந்து பொருளாதார ரீதியாக மீளமுடியாத துயரத்தில் உள்ளனர். இந்த நிலையில் தமிழக அரசு நில அளவை மற்றும் ஆவணங்களுக்கான கட்டணங்களை 10 மடங்கு முதல் 70 மடங்கு வரை உயர்த்தி மக்களுக்குப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழக அரசின் இரக்கமற்ற இந்தச் செயலை தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வன்மையாகக் கண்டிக்கிறது.

பாகப்பிரிவினை, நில எல்லை தொடர்பான தகராறுகள், சட்டப்படி தேவையான ஆவணங்களைப் பெறுவதற்கு பல ஆயிரம் ரூபாய்கள் செலவழிக்க வேண்டிய கட்டாயத்தை மக்களுக்கு இதன் மூலம் அரசு ஏற்படுத்தியுள்ளது. இந்த அபரிமிதமான கட்டண உயர்வை அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டுமென்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கோருகிறது”.

இவ்வாறு சண்முகம் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in