Last Updated : 27 Jul, 2020 12:15 PM

 

Published : 27 Jul 2020 12:15 PM
Last Updated : 27 Jul 2020 12:15 PM

ஆதார் அட்டையில் பிறந்த ஆண்டை மாற்றுவதில் சிக்கல்: உதவித்தொகை பெற முடியாமல் முதியவர் தவிப்பு

சிவகங்கை

சிவகங்கை அருகே ஆதார் அட்டையில் பிறந்த ஆண்டை மாற்ற முடியாததால் உதவித்தொகை பெற முடியாமல் முதியவர் ஒருவர் தவித்து வருகிறார்.

சமூக பாதுகாப்புத் திட்டம் சார்பில் முதியோர், மாற்றுத்திறனாளிகள், விதவைகள், திருமணமாகாத முதிர்கன்னிகள், திருநங்கைகள் உள்ளிட்டோருக்கு மாதந்தோறும் ரூ. ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படுகிறது.

முதியோர் உதவித்தொகை பெற 60 வயது கடந்து உழைக்கும் திறனற்றவராக இருக்க வேண்டும். 18 வயதிற்கு மேற்பட்ட மகனோ, பேரனின் ஆதரவோ இருக்கக்கூடாது. வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளோராக இருக்க வேண்டும்.

இத்தகைய தகுதி இருந்தும் சிவகங்கை அருகே மானாகுடியைச் சேர்ந்த ராமச்சந்திரன் (69) என்பருக்கு ஆதார் அட்டையில் பிறந்த ஆண்டு மாறியதால் உதவித்தொகை பெற முடியவில்லை. அவர் பலமுறை முயற்சித்தும் பிறந்த ஆண்டையும் மாற்ற முடியாவில்லை. உதவித்தொகையும் கிடைக்கவில்லை. அவர் திருச்சியில் உள்ள தனியார் கடையில் பணிபுரிந்து வாழ்க்கை நடத்தி வந்தார்.

தற்போது கரோனா ஊரடங்கால் கடையிலும் வேலை கிடைக்கவில்லை. வேலையும் இல்லாமலும், உதவித்தொகை கிடைக்காமலும் தவித்து வருகிறார். இதுபோன்ற குளறுபடிகளால் பலர் உதவித்தொகை பெற முடியாமல் தவித்து வருகின்றனர்.

இதுகுறித்து ராமச்சந்திரன் கூறுகையில், ‘‘ஆதார் அட்டை எடுக்கும்போது, அவர்களாகவே பிறந்த ஆண்டை பதிவு செய்துவிட்டனர். அதில் 1965 என உள்ளது. ஆனால் நான் பிறந்த ஆண்டு 1951. இதற்கு ஆதாரமாக பள்ளி மாற்றுச்சான்றிதழ் கொடுத்தாலும் ஆதார் அட்டையில் உள்ள பிறந்த ஆண்டை மாற்றித் தர மறுக்கின்றனர்.

ஆதார் அடிப்படையில் எனக்கு முதியோர் உதவித்தொகை தர மறுக்கின்றனர். பலமுறை வட்டாட்சியர் அலுவலகத்தில் மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை,’’ என்று கூறினார்.

இதுகுறித்து ஆதார் மையத்தில் கேட்டபோது, ‘ பிறந்த ஆண்டில் 3 ஆண்டுகள் வரை வித்யாசம் இருந்தால் மாற்ற முடியும். அதற்கு மேல் என்றால் எங்களால் மாற்ற முடியாது. 1947 என்ற டோல்பிரீ எண்ணில் பேசி புகார் தெரிவித்தால், தீர்வு கிடைக்க வாய்ப்புள்ளது,’ என்று கூறினர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x