தூய பனிமய மாதா பேராலயத்தில் 438-வது ஆண்டு பெருவிழா கொடியேற்றம்: பக்தர்கள் பங்கேற்பின்றி நடைபெற்றது
தூத்துக்குடி தூய பனிமய மாதா பேராலய 438-வது ஆண்டுப் பெருவிழா நேற்று தொடங்கியது. கரோனா ஊரடங்கால் பக்தர்கள் பங்கேற்பின்றி கொடியேற்றம் நடைபெற்றது.
பிரசித்தி பெற்ற இப்பேராலயத்தில் ஆண்டு தோறும் ஜூலை 26 முதல் ஆகஸ்ட் 5 வரை 11 நாள் ஆண்டுப் பெருவிழா விமரிசையாக நடைபெறும். 438-வது ஆண்டு பெருவிழா நேற்று தொடங்கியது.
தூத்துக்குடி கத்தோலிக்க மறைமாவட்ட ஆயர் ஸ்டீபன் ஆண்டகை தலைமையில் அதிகாலை 5.30 மணிக்கு சிறப்பு திருப்பலி நடைபெற்றது. தொடர்ந்து காலை 7 மணியளவில் பேராலயம் முன்புள்ள கொடிமரத்தில் அன்னையின் திருக்கொடியை ஆயர் ஏற்றி வைத்தார்.
20 பேர் மட்டுமே பங்கேற்பு
பேராலய பங்குத்தந்தை குமார் ராஜா மற்றும் அருட்தந்தையர்கள், பேராலய நிர்வாகிகள் உட்பட சுமார் 20 பேர் மட்டுமே இதில் பங்கேற்றனர். கரோனா ஊரடங்கால் பக்தர்கள் பங்கேற்க அனுமதிக்கப்படவில்லை.
ஆன்லைனில் ஒளிபரப்பு
திருப்பலி மற்றும் கொடியேற்ற நிகழ்வு, ஆன்லைன் மூலம் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது.
பக்தர்கள் கூடுவதை தவிர்க்க ஆலயத்துக்குச் செல்லும் அனைத்துச் சாலைகளிலும் தடுப்புகள் அமைத்து போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக்குமார் தலைமையில் சுமார் 700 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
பெருவிழாவில் முக்கிய நிகழ்வுகளான நற்கருணை பவனி, சப்பர பவனி ஆகியவை நடைபெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் ஆலயத்துக்குள் ஜெபமாலை, திருப்பலி, நற்கருணை ஆசீர் உள்ளிட்ட வழிபாடுகள் பக்தர்கள் பங்கேற்பின்றி நடைபெறும்.
