Published : 27 Jul 2020 07:25 AM
Last Updated : 27 Jul 2020 07:25 AM

பிளஸ் 2 முடித்த மாணவர்கள் 4 ஆண்டு பிஎஸ்சி, பிஎட் படிப்பில் சேர விண்ணப்பிக்கலாம்: காந்திகிராம் பல்கலைக்கழகம் அறிவிப்பு

சென்னை

பிளஸ் 2 முடித்த மாணவர்கள் ஒருங்கிணைந்த 4 ஆண்டு கால பிஎஸ்சி, பிஎட் படிப்பில் சேர ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என திண்டுக்கல் காந்திகிராம் பல்கலைக்கழகம் அறிவித் துள்ளது.

மத்திய அரசின் நிகர்நிலை பல்கலைக்கழகமான திண்டுக்கல் காந்திகிராம் பல்கலைக்கழகம் பல்வேறு பாடப்பிரிவுகளில் இளங்கலை, முதுகலை, டிப்ளமோ, முதுகலை டிப்ளமோ படிப்புகளை வழங்கி வருகிறது. அதில் ஒருங்கிணைந்த பிஎஸ்சி, பிஎட் பட்டப் படிப்பு சிறப்பு படிப்பாக கருதப்படுகிறது.

பொதுவாக பட்டப் படிப்பும், அதைத்தொடர்ந்து பிஎட் படிப்பும் படிப்பதற்கு 5 ஆண்டுகள் ஆகும். ஆனால், இந்த ஒருங்கிணைந்த பிஎஸ்சி, பிஎட். படிப்பை 4 ஆண்டுகளில் முடித்துவிடலாம். ஆசிரியர் பணியில் சேர விரும்பும் மாணவர்களுக்கு இப்படிப்பு ஒரு நல்ல வாய்ப்பாகும்.

பிளஸ் 2-வில் இயற்பியல், வேதியியல், கணிதம் ஆகிய பாடங்களை படித்திருக்க வேண்டும். இப்படிப்புக்கு நுழைவுத்தேர்வு ஏதும் இல்லாமல் பிளஸ்2 மதிப்பெண் அடிப்படையிலேமாணவர்கள் சேர்க்கப்படுகிறார்கள். மாணவர் சேர்க்கையில் எஸ்சி, எஸ்டி, ஓபிசி ஆகியோருக்கு இடஒதுக்கீடு உண்டு.

தற்போது இப்பல்கலைக்கழகம் 2020-21 கல்வி ஆண்டுமாணவர் சேர்க்கைக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த ஆண்டு பிளஸ் 2 முடித்துள்ள மாணவ, மாணவிகள் இந்த ஒருங்கிணைந்த 4 ஆண்டு கால பிஎஸ்சி, பிஎட் படிப்பில் சேரலாம். ஆகஸ்ட் 17-ம் தேதிக்குள் ஆன்லைனில் (www.ruraluniv.ac.in) விண்ணப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

காந்திகிராம் பல்கலைக்கழகம் மத்திய அரசு பல்கலைக்கழகம் என்பதால் கல்விக் கட்டணம்மிகவும் குறைவு என்பது குறிப்பிடத்தக்கது. கூடுதல் விவரங்களை பல்கலைக்கழகத்தின் இணையதளத்தில் பார்க்கலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x