Published : 27 Jul 2020 07:19 AM
Last Updated : 27 Jul 2020 07:19 AM

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிக்கப்படுமா?- முதல்வர் பழனிசாமி ஜூலை 29-ல் மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை

சென்னை

தமிழகத்தில் அடுத்தகட்டமாக ஊரடங்கை நீட்டிப்பதா அல்லதுமேலும் தளர்வுகளை வழங்கலாமா என்பது குறித்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் பழனிசாமி வரும் 29-ம் தேதி ஆலோசனை நடத்துகிறார்.

தமிழகத்தில் கரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த கடந்த ஜூலை 1-ம் தேதி முதல் 6-ம் கட்ட ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. ரயில், பேருந்து உள்ளிட்ட பொதுப்போக்குவரத்து, கல்வி நிறுவனங்கள், திரையரங்குகள், வணிக வளாகங்களுக்கான தடை நீட்டிக்கப்பட்டது. மேலும், இம்மாதம்முழுவதும் ஞாயிற்றுக்கிழமைகளில் எந்த தளர்வும் இல்லாத முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.

இதற்கிடையே, தமிழகத்தில் கரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருகிறது. சென்னையில் பாதிப்பு குறைந்தபோதும், மற்றமாவட்டங்களில் தினமும் நூற்றுக்கணக்கில் பாதிப்பு அதிகரித்து வருகிறது. குறிப்பாக செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம்,திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, விருதுநகர், மதுரை, கன்னியாகுமரி மாவட்டங்களில் தினமும் 200 முதல் 400 வரை பாதிப்பு பதிவாகி வருகிறது. இதை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், 6-ம் கட்ட ஊரடங்கு வரும் 31-ம் தேதியுடன் முடிவுக்கு வருகிறது. அண்டை மாநிலமான கர்நாடகத்தில் தற்போது ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ளது. கேரளாவில் முழு ஊரடங்கு இல்லை என அம்மாநில முதல்வர் அறிவித்துள்ளார். இந்தச் சூழலில் தமிழகத்தில் 7-வதுகட்டமாக ஊரடங்கு நீட்டிக்கப்படுமா என்பது குறித்து 29-ம் தேதி மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்துகிறார். மக்களின் வாழ்வாதாரம் உள்ளிட்டவற்றை கருத்தில்கொண்டு அடுத்தகட்ட ஊரடங்குநீட்டிப்பு குறித்து முடிவெடுக்கப்படும் என தெரிகிறது.

தமிழகத்தில் சில தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்பட வாய்ப்பு உள்ளதாகவும், பொது போக்குவரத்துக்கான தடை தொடரும் என்றும், நோய் அதிகம் பாதித்த கட்டுப்பாட்டு பகுதிகளில் கேரளாவில் உள்ளதுபோல் பலகட்ட ஊரடங்கு அமல்படுத்த வாய்ப்பு உள்ளதாகவும் அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x