Published : 26 Jul 2020 12:47 PM
Last Updated : 26 Jul 2020 12:47 PM

ராஜஸ்தானில் பாஜக நிகழ்த்தும் ஜனநாயகப் படுகொலை; தமிழக ஆளுநர் மாளிகை முன்பு நாளை கண்டன ஆர்ப்பாட்டம்; கே.எஸ்.அழகிரி அறிவிப்பு

கே.எஸ்.அழகிரி: கோப்புப்படம்

சென்னை

ராஜஸ்தானில் பாஜக நிகழ்த்தி வரும் ஜனநாயகப் படுகொலையை கண்டித்து நாளை தமிழக ஆளுநர் மாளிகை முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக, கே.எஸ்.அழகிரி இன்று (ஜூலை 26) வெளியிட்ட அறிக்கை:

"ராஜஸ்தான் மாநிலத்தில் அறுதிப் பெரும்பான்மையுடன் முதல்வர் அசோக் கெலாட் தலைமையில் நடைபெற்று வரும் காங்கிரஸ் ஆட்சியை கவிழ்ப்பதற்காக அந்த மாநில ஆளுநர் மூலமாக பாஜக முயற்சி செய்கிறது. ராஜஸ்தானில் பாஜக நிகழ்த்தி வரும் ஜனநாயகப் படுகொலையை கண்டித்து அனைத்து மாநிலங்களிலும் உள்ள ஆளுநர் மாளிகை முன்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவதென அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி முடிவு செய்திருக்கிறது.

அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் அறிவுறுத்தலின்படி, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பாக சென்னை, கிண்டியில் அமைந்துள்ள ஆளுநர் மாளிகைக்கு முன்பாக நாளை (ஜூலை 27) காலை 11 மணிக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி செயல் தலைவர்கள் கே.ஜெயக்குமார் எம்.பி., ஹெச்.வசந்தகுமார் எம்.பி., கே.விஷ்ணுபிரசாத் எம்.பி. மற்றும் சென்னை மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள் எம்.எஸ்.திரவியம், சிவ.ராஜசேகரன், கே.வீரபாண்டியன் ஆகியோர் முன்னிலையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

கண்டன ஆர்ப்பாட்டத்தில் தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர்கள், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி செயலாளர்கள், நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினர்கள், மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள், மாநில நிர்வாகிகள், முன்னணி அமைப்புகள் மற்றும் துறைகளின் தலைவர்கள், நிர்வாகிகள் மற்றும் செயல்வீரர்கள் பெருந்திரளாக பங்கேற்பார்கள் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்"

இவ்வாறு கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x